Tuesday, April 14, 2015

மண்ணிடம் காதல் மானிடக் காதல் மனத்துயர் போக்குவோமோ?











மெய்யாய்மெய் நோகுமே யாமிலையேல் வையமே  
உய்யாய் ஒருபோதும் வையாதே  எம்மையே 
வெயிலிலும் பெய்யும் மழையிலும் கிடத்திடினும்  
நொய்தபின்னும் காப்போம் உமை !





இயற்கையைப் பழித்ததன் இதயத்தை அழித்தால்
இன்பங்கள்  சூழ்ந்திடுமோ? - நம்
இயல்பினைத் தொலைத்தோம்! செயற்கையில் திளைத்தோம்!!
எதுவரை வாழுவோமோ?

காடுகள் வளங்கள் கானுறை உயிர்கள்
காப்பது கடமை யன்றோ - நலம்
நாடியே இயற்கை நலம்பட இருப்பின்
நன்மையே சூழுமன்றோ





  
எந்நிலையைக் கடந்தும் வாழ்வேன் உமக்காய்
 நான் மடிந்தால் வையம் 
என்மடி மீதுதான் உறங்கும்
சாணுடல் எனினும்நான் சாவேனே
உம்மாரோ டென்பதை மறந்தீரே


பயனற்ற செயலால் பின்வரும் உலகைப்
பார்த்திட மறக்கிறோமோ? - நெஞ்சம்
அயர்வுறும் சிறையில் நம்மையே அடைத்து
அதற்குள்ளே இறக்கிறோமோ?

   
  தலை சுற்றுகிறது உயிருக்கு உலை வைப்பதால்
 வாழும் போது நான் ஆகாரம்  மாளும் போதோ ஆதாரம்



வயலினில் உழுதிடும் உழவனின் தோளை
வணங்குதல் அறிகிறோமோ? - அந்தச்
செயலினில் அன்றி நம்பசி தீரா
சிந்தித்துத் தெளிகிறோமோ?
பழமரம் நாடும் பறவைகள் பாவம்
வளங்கள் அற்றே வையம் சாகும்  




  

ஆர்வத்தின் சிப்பியில் அழகுற விளையும்
முயற்சிகள் முத்தல்லவா? - எது
தீர்வதென்றாலும் கடலெனும் ஊக்கம்
தீர்ந்திடா சொத்தல்லவா?

குயவனாய்க் காலம் அனுபவக் கைகள்
கொண்டிடும் சக்கரத்தில் - சிக்கி
மயங்குகின் றோமோ மதிவழி நின்று
மாறுதல் செய்கிறோமோ?

மரங்களை வெட்டும் மனிதனின் கெட்ட
மனதினை வெட்டுவோமோ - இயற்கைக்
கரங்களைச் சுட்டால் கண்ணீரே எஞ்சும்
காயங்கள் ஆற்றுவோமோ?

பெண்ணெனும் பூமி பெண்களே நதிகள்
பெண்மையைப் போற்றுவோமோ - காடு
கண்ணெனக் காத்து கலைப்பவர் செய்கை
கண்டித்துத் தூற்றுவோமோ?

எண்ணிட எண்ணம் என்னிலே உண்டு
இன்செயல் ஆக்குவோமோ - வாழும்
மண்ணிடம் காதல் மானிடக் காதல்
மனத்துயர் போக்குவோமோ?

21 comments:

  1. மரம்வெட்டும் கைகள் மரணிக்கும் நாளில்
    உரங்கொண்டு சொன்ன கவிதை - தரமுண்டு
    நன்றென் றுரைக்குமனம் நாடும் தமிழ்பாடல்
    வென்றுசெயும் நன்மை விதி.


    அருமையான இசைப் பாடல் வடிவம்..

    தொடருங்கள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. போராடும் வாழ்வுதான் பாரில் யாவர்க்கும்
      பாராளும் மன்னர்க்கும் இவ்விதி செய்யுமே
      மாயம்யான் விதிவிலக் கல்லவே கொண்டாலும்
      காயம் கடமைதவ றேன் !
      வாருங்கள் ஆசானே இனிய கருத்தை உடன் வந்து ஈந்தீரே மிக்க மகிழ்ச்சி.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி !

      உம்தயவைப் பெற்றுய்ய நற்கவியின் சூக்குமத்தை
      செம்மொழியை மேலும்தா கற்று!

      Delete
  2. வணக்கம்
    அம்மா

    உண்மைதான் காலம் உணர்ந்து கவி வடித்த விதம் கண்டு மகிழ்ந்தேன்... இன்று மரம் வெட்டுவதால் சுவாசிக்க ஒட்சிசன் இல்லாமல் போகிறது ஒன்றை வெட்டுவோம் ஒன்றை நாட்டுவோம்.. அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன் !

      Delete
  3. மரங்களை வெட்டும் மனிதனின் கரங்கள்
    அல்ல
    மனங்களை வெட்டுவோம்,
    அருமையான கவி, வாழ்த்துக்கள். தொடருங்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி !

      Delete
  4. காடுகள் வளங்கள் கானுறை உயிர்கள்
    காப்பது கடமை யன்றோ - நலம்
    நாடியே இயற்கை நலம்பட இருப்பின்
    நன்மையே சூழுமன்றோ

    இயற்கை அழிவைப்பற்றிய அருமையான கவிதை சகோ
    மரங்கள் வளர்ப்போம்
    மழை வளம் பெறுவோம்

    எல்லாம் சரி யாரைக்கேட்டு கோடரியை எடுத்து வந்தீர்கள் ?

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜி !
      \\\\எல்லாம் சரி யாரைக்கேட்டு கோடரியை எடுத்து வந்தீர்கள் ? /////
      நீங்கள் சொன்னதாகத் தானே ஞாபகம் அதற்குள் மறந்து விட்டீர்களா என்ன.ம்..ம்..ம்

      Delete
  5. உங்க சிந்தனைகள் எல்லாம் உயர்வானதாக இருக்கிறது, இனியா! :) அதை கவிதை வடிவமாக்கியது அதனினும் சிறப்பு! அக்கவிதையை என்னைப்போல் பாமரனிடம் பரிமாரிக்கொள்வது அதனிலும் சிறப்பு! :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வருண்
      \\\அக்கவிதையை என்னைப்போல் பாமரனிடம் பரிமாரிக்கொள்வது அதனிலும் சிறப்பு! :)/////
      இது கொஞ்சம் ஓவரா தெரியலையா உங்களுக்கு நீங்கள் எல்லாம் பாமரன் என்றால் அப்ப நாங்கள் எல்லாம் யாரு கொஞ்சம் சொல்லுங்க
      மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  6. அடுத்த தலைமுறைமீது அக்கறை உள்ள கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  7. வாழும் போது நான் ஆகாரம் மாளும் போதோ ஆதாரம்
    அருமை சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  8. /// கெட்ட மனதினை (முதலில்) வெட்டுவோமோ...? ///

    அப்படிச் சொல்லுங்க...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  9. இயற்கையைப் பழித்ததன் இதயத்தை அழித்தால்
    இன்பங்கள் சூழ்ந்திடுமோ? - நம்
    இயல்பினைத் தொலைத்தோம்! செயற்கையில் திளைத்தோம்!!
    எதுவரை வாழுவோமோ?//

    ஆம்! உண்மையே! எதுவரை ?! //மரங்களை வெட்டும் மனிதனின் கெட்ட
    மனதினை வெட்டுவோமோ/ / ஆம்! அது....

    அருமையான வரிகள். அந்த மரம் தலை சுற்றுவது போல் சுற்றுகின்றதே அருமை....

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ அதுக்கே தாங்க முடியலை அது தான் சுத்துது ஹா ஹா...... நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  10. இசையுடன் கூடி இனிக்கப் படித்தேன்
    அசையும் மரங்களில் ஆழ்ந்து !

    ஆழ்ந்து சிந்திக்கவைக்கும் வரிகளில் அர்த்தமுள்ள கவிதை வாழ்த்துக்கள் சகோ இனியா தொடரட்டும் தமிழ் பணி வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. அட.... வாங்கையா வாங்க இன்னிக்கு ஒரே மழை அதானே பார்த்தேன் நேற்றே இருண்டு கிடந்திச்சில்ல ம்.. ம் சரி ஆழ்ந்து சிந்திச்சீங்க சரி எப்ப எங்களுக்கெல்லாம் கவிதை தருவதாக உத்தேசம் விரைவில் தானே பார்க்கலாம் ok ok ..
      ஓடுமீன் ஓடி உறுமீன் வரும் வரைக்கும்
      வாடி யிருக்குமாம் கொக்கு! அது மாதிரி காத்திருக்க வேண்டிய தாயிருக்கு இல்ல. ம்..ம்.ம் சரி சரி சும்மா கலாய்க்க தான் dont worry ok வா!

      கடமை முடிந்தபின் வரலாம் வலைக்கு
      தடங்கல் வராமலே வாழவேண்டும் என்றும்
      மடங்காய் பெருகட்டும் சீரும்சிறப்பும் பேரும்
      உடல்நலமும் பெற்றிடவென் வாழ்த்து !

      மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  11. வாருங்கள் சகோதரி பதிவினை காண்பதற்கு!
    பாரிசில் பட்டிமன்ற தர்பார்
    http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
    வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.