Friday, September 27, 2013

எல்லை இல்லா

 




எல்லை இல்லா வானம் எங்கும்
ஏணிப்படிகள் இல்லை போலும்
ஏழை நெஞ்சம் ஈழம் எங்கும்
எடுத்து இயம்ப இல்லை தஞ்சம்

ஏற்பதில்லை ஏழை நியாயம்
காக்கவில்லை பெண்ணின் மானம்
எத்தனை இன விரோதம், பதவி மோகம்
எண்ணிலடங்கா உயிர்கள் சேதம்

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற
எண்ணம் கொண்டான் அண்டை அயலான்
எமனாக அரணா பாரதம் புதிரா
எமை காக்க வேண்டும் உயிரா 

எட்டயபுர பாரதிக்கு எட்டவில்லையே
இந்த செய்தி எட்டியிருந்தால் எகிறியே
குதித் திருப்பான் ஏளனம் செய்திருப்பான்
ஏட்டிலே எழுது முழுதும் எடுத்ததை பாடு பரவும்

என்று காணும் இன்ப வாழ்வு
ஏங்கும் நெஞ்சம் வசந்தம் பாடும்
ஏரும் மீளும் ஊரும் வாழும்
வானவில்லும் வந்து போகும்

Friday, September 20, 2013

மனித மனமே கேளு



மனித மனமே கேளு
மயக்கம் என்ன கூறு
கலங்கும் நெஞ்சே ஆறு
இது வாழ்வில் காணும் பேறு

எதுவும் கடந்து போகும்
எண்ணம் கிடந்து வாட்டும்
எதையும் தாங்கும்  இதயம்
எளிதில் மறந்து போகும்

மனித வாழ்வும் மரணம் ஆகும்
மடிந்த பின்பும் ஜீவன் வாழும்
ஏழ் பிறப்பும் கடந்து செல்லும்
விதைத்த வினைகள்  அறுக்கு  மட்டும்

நினைத்து  பார்த்தால் சிரிக்க தோன்றும்
புரியாத புதிர் போலவே நோக்கும்
நிம்மதி தேடி அலையும்  இருந்த நிம்மதியும்
போகும் இடம்தனை  சென்றடையும்

விதி என்று வேதனையில் வாடும்
போராடும் வாழ்வில் நீராட தோன்றும் 
வென்று விடத் தவிக்கும் வெட்டிவிடத் துடிக்கும்
தெய்வமதை நிந்திக்கும் கண்டபடி சிந்திக்கும்

இனிமை காண வேண்டின்
இணைத்துப் பார்த்தல் தவிரு
அடுத்தவர் வாழ்வில் பொருளில்
ஆசைகள் கொள்ளாதிரு, அன்பாய் இரு

உயர்பவர் தனை கண்டால் உளமாக வாழ்த்திடு 
போட்டி, பொறாமை வாராமல் தடுத்திடும்  
எதிரிக்கும் தீங்கு எண்ணாதிரு
இருப்பதை வைத்து செவ்வனே வாழு

தன் மனசை தானே கண்டு பயம் கொள்ளல் நல்லது 
செய்வன எல்லாம் உடனே சரியாக
செய்தலும் சிறந்தது எதிர்பார்ப்பு இல்லையேல்
ஏமாற்றம் இல்லையே இவை சிறிதேனும்
நிம்மதி தரும் நிலையில்லா இவ்வுலகில்

Saturday, September 14, 2013

நல்லூர் நாயகனே





 நல்லூர் நாயகனே 
முத்தமிழ் வித்தகனே
வித்தைகள் உனக்கென்ன புதிதா 
விதைத்திடும் விதைகளெல்லாம் 
மெத்திடுமா நின் அருள் 
இன்றி முத்திடுமா இவை புத்தியில் 
உறையாமல் செத்திடுமா 
விதி என்று நதி வழி செல்லாது 
கதி என்று வந்தவரை 
காத்திடும் கருணை தெய்வம்
கந்தா நீ அல்லவா 
சரவணபவ என வாழ்வினில் 
விடிவு தர வந்த வடிவேலா
என் உளம் அறிந்து
  நினைந்து உனை பாடி 
நான் மகிழ கவிதையும் தந்த கதிர்வேலா
இதுவும் கந்தன் கருணை தானா 
வேண்டியதை தருபவனே 
உன்னை தான் பாடுகிறேன்
உன்தனையே வேண்டுகிறேன்
நினைவு தெரிந்த நாள் முதலாய் 
நின்தனையே வணங்கி நின்றேன்
நடை பழகும் போதினிலும் 
உன் தாள் தான் பணிந்து நின்றேன் 
பிஞ்சுக் கரங்களினால் கை 
கூப்பி  நின்றேன் 
இன்று வரை உன் நினைவே 
இறக்கும் வரை வேண்டுகிறேன்
கடல் தாண்டி வந்தாலும் கருணை 
மழை பொழிபவனே உன்னை 
கொண்டாடுவோரை திண்டாட 
வைப்பவனே சிந்தனை திறம் வேண்டும் 
நெஞ்சினில் உரம் வேண்டும் 
நற் பண்புகள் வளர்ந்திட வரம் வேண்டும் 
நிந்திப்பவர் தனை  
நித்திரை கொள்ளவிடு அவர் 
புத்தியில் உறைந்துவிடு
குறைகள் அற்ற வாழ்வு சாத்தியமா 
குற்றம் அற்றவர் யாரும் உண்டா 
குறைகள் பேசுவதில் அர்த்தம் உண்டா 
அனைத்திலும் உண்டு 
நன்மையையும் தீமையும் அறியாரா
நெருப்பும் நன்மை செய்திடுதே 
கருக்கிடும் போது பயம் வருதே 
தென்றல் வீசினால் சுகம் தருதே 
புயலாய் மாறினால் பயங்கரமே
 ஓங்கார நாதனே உதித்திடும் 
என் நெஞ்சினில் உன் கோலமே 
சரணம் சரணம் சண்முகா சரணம் 
நீ வரணும் வரணும் முருகா என்றதும் 
தரணும் தரணும் நின்னருளே
நித்திலம் கொழித்திடவே


Saturday, September 7, 2013

இரவினில் வரும் நிலவே




 
இரவினில் வரும் நிலவே 
நீ பகலினில் வருவாயா
பகலில் நடக்கும் நிகழ்வுகளை     
நீ பார்த்திட விளைவாயா

இயற்கையின் நியதியை 
 மீறிட நினைப்பாயா 
இன்பம் துன்பம் எது
வென்று அறிவாயா 

பௌர்ணமி நிலவில் 
தாய் மண்ணில் இருந்து
ஊர்க்கதை அளப்பதும்   
இனிமேல் நடக்காது  

இயந்திர உலகில் பயணிக்கும் 
எமக்கு நேரமும் கிடைக்காது 
 கவனம்  முழுவதும் கணனியிலே    
இயற்கையை  ரசிக்கவும் இயலாது  

சிறுவரின் ஆட்டமும் வீதியில் இல்லை
கணினியில் தானே நோட்டம்  
ஓடாமல் ஆடாமல் ஒய்ந்து கொண்டார் 
ஒரு இடத்தில் நோய்கள் கொண்டவர் 
பருத்து விட்டார் பல இடத்தில் 

இதை அறியாமல் நீ தூங்கும் போது 
வருகின்றாய் விழிக்கும் போது 
மறைகின்றாய் எமை வெறுப்பது 
போலேன்  நடக்கின்றாய்

என் கரங்களிலே உனை ஏந்திடவா 
என் மனசை திறந்து பேசிடவா 
பரிதியவன் ஒளியினையே இரவல்
 தந்தானா அதை  இரவினில் தந்தானா

பகலினில் வந்தால் தன் மவுசு 
குறைந்திடும் என்றே பயந்தானா இல்லை
 பகலை பார்த்தால் பயந்திடுவாய் 
என்று பதுங்கிட சொன்னானா 

 உன் இளகிய மனசு வெதும்பிடும்
என்று விலகிட சொன்னானா
 இனிமையானது இரவு தான்
என்றிரவை ஆண்டிட சொன்னானா 

காதலர் கண்கள் கலப்பதையும்
கனவினிலே மிதப்பதையும் 
கண்டிட சொன்னானா 

அமைதியாக உறங்கும்
 உலகை ரசித்திட சொன்னானா 
ஆர்பாட்டம் இல்லாத அலையினையே 
அணைத்திட சொன்னானா

பகலவனை நீ பார்த்ததுண்டா 
பரிசில்கள் ஏதும் பெற்றதுண்டா
தாமரை மலர்ந்தது கண்டாயா 
இளம் துளிர்கள் மிளிர்வதை அறிவாயா

வானத்திலே  வண்ணக் கோலம் போடும் 
பறவை  இனங்கள் கண்டாயா 
 பொங்கும் கடலில் துள்ளி குதிக்கும் 
மீன்வகைகள் நீ பார்த்ததுண்டா

துள்ளி ஓடும் புள்ளி மானின் 
மருண்ட கண்கள்  கண்டாயா
சூரிய ஒளியில் பட்டு தெறிக்கும் 
வானவில்லை நீ கண்டாயா

வறுமையில் சிக்கித் தவிக்கும் 
வாழ்க்கைகள் கண்டாயா
பிஞ்சுக் கரங்கள் உழைக்கும் 
காட்சி கண்டிட வேண்டாமா 

பொம்மைகளை அவர் கண்டதில்லை 
பல உண்மைகள் கண்டார்கள் 
 பந்தாடும் வயதினிலே தினம் 
திண்டாடும் கொடுமைகளை 
குறைத்திட வேண்டாமா

குற்றம் குறைகள் நலிந்திருக்கே 
அதை நிறுத்திட வேண்டாமா
அரசியலும் ஒரு சாக்கடை தான் 
அதை அலசிட வேண்டாமா

நீ ஒரு முறை பார்த்தால் 
ஒளிந்திடுவாய் மேகத்தின் 
மடியில் மறைந்திடுவாய்
வேண்டாம் எமக்கு ஏமாற்றம் நீ 
இருக்கும் இடத்தில் இருந்து விடு

Thursday, September 5, 2013

வேழ முகத்தோனே


 
வேழ முகத்தோனே முதல் 
வேண்டுவதுனைத் தானே
உனை மஞ்சளில் உருண்டை 
செய்து அதில் உள்ளபடி அருகம்புல் 
ஒன்று நாட்டி முன் வைத்து
எடுத்த கருமம் எல்லாம் 
இனிதே நடந்தேற இறைஞ்சி 
நிற்போம். முன்னவனின் பொற் 
பதங்கள் பணிந்து நிற்போம்.

பேழை வயிற்றோனே பாழும் 
உலகில் வாழும் மனிதர்கள் 
நாளும் நலம்பெறவே
கோளும் துணை செயவே குற்றம் 
குறைகள் எல்லம் பொறுத்திட
முன் செய்த தீவினையும் முற்றும் 
விடைபெறவே தோப்புக்கரணம் 
 இட்டு வணங்கி நிற்போம்.


உனை தொழுதிடும் பொழுதும் 
அழுதிடும் கண்கள் நினைந்திடும் 
பொழுதும் உருகிடும் நெஞ்சம் 
பதிகங்கள் பாடி பரவிடும் போதும் 
பெருகிடும் பக்தி வெள்ளம் 
விழுந்திடும் பொழுதும் எழுந்திடும் 
பொழுதும் ஒலித்திடும் 
நாவில் உன் நாமம்

பவள நிறத்தோனே பார்வதி பாலகா  
வையத்தில் அனைவரும் பாவிகளா 
நீ பேசிடு போகும் பாவங்களே 
கல்லாயிருந்து நீ கண்டது என்ன
கண்களை திறந்து கருணை புரியும் .
மோதகபிரியனே பாரினில் இனிமேல்
மோதல்கள் வேண்டாம். மாறுதல் 
வேண்டும் நீ மாநிலம் வாவா.
தேறுதல் தர வல்லவனே 
தேனும் பாலும் தந்திடுவோம் 
தேன்தமிழ் சிந்திட வாவா 


கானகத்துக் குயில்கள் எல்லாம் 
கானம் இசைக்கும்.ஈழத்துக் 
குயில்கள் இசைத்தால் கூடாதா 
இரைதேடி பறப்பதும் பாவமா இது 
முனோர்கள் இட்டு சென்ற சாபமா 
இல்லை ராமரை பிரிந்த சீதை 
அழுத கண்ணீரா சிந்திய முத்துக்கள் 
மண்ணில் சிதறியதாலா சீர் கெட்டதங்கே.
நம்பிக்கை கொண்டு தும்பிக்கையானை 
வேண்டுகிறோம் எமை வாழவிடு எங்கும் 
அமைதியும்  அன்பும் நிலவிடு