Monday, January 27, 2014

விபரீத ஆசைகள்







நோயினில் நோடிந்திருந்தேன் 
வீட்டினில் தனித்திருந்தேன்
வாதையில் படுத்திருந்தேன் 
விநோதமாய் உணர்ந்தேன்
வியந்தேன் நெஞ்சினில் 
வண்ணமாய் எண்ணங்கள் 
சொரியக் கண்டேன் 

மண்ணை பார்த்தேன் 
விண்ணை பார்த்தேன் 
விபரம் அறியாது தவித்தேன் 
பஞ்சபூதங்கள் தானருகில் 
பரிசீலனை செய்யவே பாடிய
படியே எழுதுகோல் எடுத்தேன் 
எண்ணங்கள் தாள்பதித்தேன்.




பதறாமல் பாங்குடன் 
கேள் என்றே 
படித்தேன்
மழையை கண்ணால் 
கட்டிட ஆசை
மின்னலைக் கூட 
தொட்டிட ஆசை என்றேன்

காற்றினைக் கண்ணால் 
கண்டிட ஆசை நெருப்பைக் 
கூட சுட்டு விரலால் 
தொட்டுப் பார்த்து சுட்டிட 
ஆசை ஒட்டு மொத்த 
நீரினைக் கூட உறிஞ்சிக் 
குடிக்க ஒரு பேராசை 

ஓயாத அலைகள் சூரிய சந்திரர்க்கு 
ஓய்வு கொடுத்திட வேண்டும் 
என்றாசை மனிதரை எல்லாம் 
மாணிக்கமாக மாற்றிட ஆசை 
நட்சத்திரங்கள் அனைத்தையும் 
மாலையாய் கோர்த்து மகளின் 
கழுத்தில் அணிந்திட ஆசை

வான வில்லை வளைத்து 
என் மகனின் கையில்  
கொடுத்திட ஆசை என் உயிரை 
பிரித்து கயிறாய்த் திரித்து 
கணவரை அதனால் கட்டிட ஆசை
உயர்ச்சி தாழ்ச்சி ஏழ்மை கூட 
ஒழிந்திடவேண்டும் என்றொரு ஆசை 

மாண்ட மண்ணின் மைந்தர்கள் 
மீண்டும் தோன்றிட வேண்டும் 
என்றொரு ஆசை தரணியில் தமிழ் 
இனம் காக்க ஒருவன் ஹரனாய் மாறி தரணி 
முழுவதும் வென்றிட ஆசை இதனிலும் 
மேலாய் ஆண்டவன் மடியில் ஒரு கணமேனும் 
ஆழ்ந்து உறங்கிட வேண்டும் என்பது என் தீராத ஆசை என்றேன்

ஒரு கணம் பஞ்சபூதங்கள் 
மருண்டே நின்றது 
மறந்திடு என்றது 
விளையாட்டு வினையாவது 
போல் விரைந்தே சென்றது 
பார்த்தவன் விண் நகைத்தான் 
பின் புன்னகைதான்

விண்மீனும் கனிவாய் 
கண் சிமிட்டியது இனிமையாய் 
இரவும் நிலவும் எனை ஈர்க்க 
கதிரவன் கதிர்களால் கையசைக்க 
வாயுவும் மெல்லென வாடையை 
வீசிட உணர்வினை இழந்தேன் 
உறக்கத்தில் ஆழ்ந்தேன்.

இது உண்மை தான் என் முதல் கவிதை எல்லோரும் எல்லாம் எழுதி விட்டிருப்பர்கள். நான் எதை எழுதுவது வித்தியாசமாக எழுத நினைத்தே  நடக்கமுடியா தவற்றை தொகுத்து எழுதிபார்த்தேன். அதுவே பின்னர் விருப்பமாக தொடர்கிறது.








Sunday, January 19, 2014

மாதவம் செய்திடல் வேண்டும்




 VISHNU MATRIX by VISHNU108


மாதவம் செய்திடல் வேண்டும் 
மாதவனே உன்தாள் பணிய -மூங்கில்
போன்ற தோளுடையா னகமலர்வான்
மாலை மலர்கள் தூவ

நீடு வாழ்ந்திட நிதமும்  
சேவிக்க வேணுமும் நாமம்
நீற ணிந்தால் நெற்றியிலே
பாழ் படுமே பாவம்

ஆழிக் கடலில் வீற்றிருந்து
ஊழித் தீயை அணைப்பாய்
பேரழிவை தடுத்திடவே
தோன்றிடு வாய் விருப்பாய்

வேழம் வளர்ப்பது போல் 
தோன் றிடாது வாழ்வு 
வீழும் வாழ்வை காத்திடவே -துயர்
வீழும் பார்வை வீசிடவே

பாழும் உலகில் நாளும்
கொடுமை தணிய வேண்டும்
கொடுங் கூற்றன்கூட கண்டு
விலகி ஓட வேண்டும்

பாம்பின் மீது பள்ளி
பார்த்திபன் ஏன் தள்ளி
தீபம்ஏற்ற நீயும் எமை 
திரும்பி பார்க்க வேண்டும்

ஊடுருவி எம் உணர்வில் 
உயிரில் கலக்க வேண்டும்
உறைந்திருக்கும் ஊழ் வினையோ 
உருகி ஓட வேண்டும்                             



 GOVINDA'S FLUTE by VISHNU108

கார் குழலை கண்டதுமே
பின்இழுப்பாய் கார்மேக கண்ணா
வெண்ணெய் திருடி உண்ணும்
வேய்ங்குழல் ஊதுகின்ற வண்ணா

 


மாதர் சூழும் போது
மலர்ந்திடும் உம் வதனம்
ஆண்டாள் சூடிக் கொடுத்த 
மாலை சூடிக் கொண்ட போதும்

மாதங்களில் மார்கழியே உம்
மனதிற் கினிய மாதம்
மாதர்களும் மகிழ்ந்து பாடி
துயில் எழுப்பும் நேரம்

தீயினிலும் கலந்தி ருப்பாய்
தூணிலும் நிறைந் திருப்பாய்
பாரினிலும் பரந்து இருப்பாய் -பேரொளியாய்
உள்ளத்தே உறைந்திடுவாயே

Friday, January 17, 2014

பத்துமாதம் சுமந்து

ஆரம்ப காலங்களில் எழுதியது    




 
பத்துமாதம் சுமந்து இருப்பாள் அன்னை.
அவர்பக்கத்திலே துணைஇருப்பார் தந்தை.
மடியினிலே சுமந்திருப்பாள் அன்னை.  

மனதினிலே சுமந்திருப்பார் தந்தை. 


கற்பனைகள் கண்டிடுவர் நாளும் குழந்தை 
பிறந்தவுடன் குதித்திடுவார் மகிழ்ச்சி கடலில். 
உலகத்தையே ஜெயித்ததாக நினைப்பர்.
மழலை மொழி கேட்டு அவர்கள் மறந்திடுவர்  தம்மை.

 
சுட்டித்தனம் அத்தனையும் பார்த்து பார்த்து ரசிப்பர்.
பெரும் சாதனையே செய்ததாக சொல்லி சொல்லி மகிழ்வர்.
பிள்ளைகளோ நோயினிலே விழுந்துவிட்டால் போதும். 

நொடிந்திடுவர் நொடியினிலே நோன்பு கூட இருப்பர். 

 

குழந்தைகளோ தலையணையில் துங்கிடவே மாட்டார். தந்தை 
நெஞ்சணையை தானே தன் பஞ்சணையாய் கொள்வர்.
பெற்றவரின் கரங்களையே பற்றிக்கொண்டு நடப்பர்.
பெற்றவரோ தன்னுடைய ஊன்றுகோல் என்றே நினைப்பர்.


குழந்தைகளோ ஓடி தெருவினிலே விளையாடி 
விழுந்தால் தீயினையே மிதித்தது போல்  
துடித்திடுவார் தந்தை. அண்டை அயல் 
ஓடி வர அழுது புலம்பிடுவார் அன்னை
 
தந்தை தாய் தாம்  கண்ட கனவெல்லாம் 
நனவாக்க எண்ணி இரவு பகல்
உழைத்திடுவர் வருத்திடுவர் தம்மை கண்ணை

இமை காப்பது போல் காத்திடுவார் உன்னை.
 

கல்வி கலை கற்றுவர பள்ளியிலே சேர்ப்பார்.
தந்தையோ தன் பொறுப்பை எண்ணி பள்ளி கொள்ள மறுப்பார்.
பக்கத்திலே இருந்து அவர் பாரியாரும் தவிப்பார்.
முற்றதிலேயிருந்து அவர் வானத்தையே முறைப்பார்.

நட்சத்திரம் அத்தனயும் எண்ணி  எண்ணி பார்ப்பார்.
பரிட்சையிலே தேர்ச்சி பெற்றால் தந்தை 

வெகுளியாக சிரிப்பார் தோத்து விட்டாலோ 
அவர் துவண்டே  விடுவார்.
 

வயது வந்து விட்டாலோ பெற்றவர்கள் 
வயிற்றினிலே நெருப்பை கட்டிகொள்வர்.
சீக்கிரத்தில் திருமணத்தை செய்து வைத்து விடுவார்.
திருப்தியோடு திண்ணையிலே அமர்ந்து பெரு மூச்சு விடுவார்.
 

நொந்திருப்பார் நோய்சூழ நெருப்பின் மேல் நிற்பார்
தலையிலுள்ள சுமைகளையே இறக்கிவைக்க துடிப்பார்.
எமைதாங்கிடும் பிள்ளை என்றே தலைகனம் கொண்டிருப்பார்
இந்நிலையில் பெற்றவரை புறக்கணித்தல் எவ்விதத்தில் நியாயம்

 நினைவில் இல்லையா அவர்கள் செய்து வந்த தியாகம்.
அவர் பட்ட பெரும் பாட்டை எல்லாம் மறந்திடுதல் முறையோ.
பெற்றவரும் பிள்ளைகளை புரிந்து கொள்ளல் வேண்டும்.
வெளிநாட்டில் படும் பாட்டை தெரிந்து கொள்ளல் வேண்டும்.



 படத்தின் மீது சுட்டியை கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்






Saturday, January 11, 2014

பொங்கல் பொங்கலிட


http://upload.wikimedia.org/wikipedia/commons/1/18/Sunrise_animation.gif
   
படங்கள் மீது சுட்டியை கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்


பொங்கல் பொங்கலிட பொங்கிடும் 
       மங்களம் பொங்கிடும் தங்கிடும்
வழங்கும்  இன்பமும் எங்கணும்  
       தினகரன் விண்ணில் தோன்றிட
திங்கள் நெஞ்சில் தவழ்ந்திடும்
      தொட்டவை எல்லாம் துலங்கிடும்
பொங்குதமிழ் எங்கும் புலர்ந்திடும்
       பார்புகழ ஈழபோர் முடியும் நிலைவரும்                                               

   தையிலே பொங்கல் இட
        உழவர் உள்ளம் பொங்கிடும்
கள்ளமற்ற மழலையாக மலர்ந்திடும்
        உண்மையும் உயர்வும் கொண்டிடும் 
மடமை எல்லாம் நீங்கிடும்
       அடிமைத் தன்மை அடங்கிடும்
எங்கும் நிதர்சனமாய் உறங்கிடும்
       வாழ்வும்  வளமும் பெருகிடும்
sunrise animated photo: 100x120 thsunset_beach.gif
     
கதிரவன் கதிர்களால் உயிர்கள் வாழும்
       கடுகளவு கூடினால் பயிர்கள் வாடும்
அருளும் பொருளும் நிறைந்திடும்
       நேர்வழியில் நிதமும் சென்றிடும்
ஒற்றுமை எங்கும் ஓங்கிடும்
       அன்பு வெள்ளம் அலையலையாய்
அனைவரையும் ஆட்கொள்ளும்
       உன்னதமான உலகொன் றுருவாகும்

பஞ்ச மஞ்சி விலகும்
         படிய ளக்க மிஞ்சும்
வஞ்சம் முழுதும் நீங்கும்
        துன்பம் வந்து கெஞ்சும்
துயிலும் போது கூட 
        துயர்தூர விலகி போகும்
பகையை வெல்ல முடியும்
        பழவினை களையே கொல்லும்
                                                                      
தேடக் கிடைக்காத திருவருளும் நமை
       வந்து சூழும் நாளும்கோளும் 
தேடிவந்தே நன்மை செய்யக் கூடும்
       பேரொளியாய் விளங்கும் 
அதுபூ வுலகாய் மாறும்
        இல்லை இல்லை என்ற தொரு
நிலை மாறி போகும் காதல்
         அன்புகருணை பிரவாக மாய்ஓடும் 
       
pongal photo: Happy Pongal HappyPongal.gif

நன்றி தனை நவின்றிடவே 
       ஞாயிறுக்கு பொங்கலிடும்
ஆதவனை அலங்கரிக்க 
       கோலமிடும் கும்பிடும்
இஞ்சியிலை மஞ்சள்ளிலை மாலையிட்டு
       பானையில் பச்சரிசி சக்கரையும் 
கற்கண்டும் பாலோடு நெய்யும்மிட்டு                                                        
       தித்திக்கும் பொங்கலிடும் திருநாளில்






           

Sunday, January 5, 2014

இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்

                     

 

  இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்

 படங்களின் மீது சுட்டியை கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்

சினிமா பற்றி எடுத்துச்சொல்ல கிடைத்த அரிய சந்தர்ப்பம் இது என்றே நான் எண்ணுகிறேன். அனைத்து தரப் பட்ட மனிதர்களையும் கவரும் வகையில் சினிமா ஒரு குறைந்த செலவில் நிறைவையும், குதூகலத்தையும்  கொடுக்கக் கூடிய வகையில் பொழுது போக்கக் கூடிய ஒன்று என நிரூபித்துள்ளது. மாணவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் புஸ்தகங்கள் வாசிப்பதை விடவும் சினிமாவே கவர்ந்துள்ளது. உணவை தவற விட்டாலும் விடுவார்கள் சினிமாவை தவற விட மாட்டார்கள். சினிமா சமூகத்தினிடையே பலமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது, நல்லதோ  தீயதோ எந்த விடயமானாலும் சரி,  அத்துடன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமானாலும் இலகுவில் மக்களை சென்றடையக் கூடியது.




 பல வித எண்ணங்களோடு பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள் பல தரப்பட்ட மனிதர்கள். பக்குவம் உள்ளவர்கள் இல்லாதவர்கள், கல்வியறிவு  உள்ளவர்கள் இல்லாதவர்கள், பணம்  உள்ளவர்கள் இல்லாதவர்கள் என்றெல்லாம்  வகை படுத்தலாம். வாழ்க்கையில் நாம் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்பது பழமொழி. நாம் எவ்வளவு விடயங்களை இந்த ஜென்மத்தில் கற்றுக் கொள்ள முடியும் சொல்லுங்கள். எல்லா விதமான அனுபவங்களையும் பெற்று கொள்ள வேண்டியது அவசியமா? அடுத்த வருடைய  அனுபவங்களையும் கற்ற பாடங்களையும் நாம் படிப்பினையாக கொள்ளுதல் இலகுவானது அல்லவா? தோல்வியை தழுவித் தழுவி விலையும் கொடுத்து அனுபவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை யல்லவா?

வாழ்வில் எத்தனை பேரை சந்திக்கிறோம். எத்தனை பேர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். பலர் தங்கள் தோல்விகளை தெரியப் படுத்துவதே  இல்லை. ஏனெனில் மற்றவர்கள் தங்களை அறிவிலிகள் என்று எண்ணக் கூடும் என்று, அதே போல வெற்றிகளையும் வெற்றிக்குரிய
காரணங்களையும் கூற மாட்டார்கள், ஏனெனில் மற்றவர்கள் தங்களை மிஞ்சி விடுவார்கள் என்பதாலுமே தான்.

இப்படி இருக்கையில் வாழ்க்கைக்கு தேவையான பல விடயங்களை நாம் இலகுவாக கற்று கொள்ளக் கூடியது சினிமாவே. எத்தனை விதமான மனிதர்கள் உலகத்தில் உள்ளனர் நாம் சந்திக்கும் மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்றே எண்ணுவோம். பாதிக்கப்  படும் வரை உணரமாட்டோம். ஆனால் பாம்பும், தேளும், நரியும் போல் அருகில் இருந்தே உயிரை எடுப்பர். பாதிப்புற்ற பின்னர் வருந்தி என்ன பயன். இந்நிலையில் சினிமா விழிப்போடு இருக்க உதவுகிறது என்றே சொல்லலாம். பலரின் வில்லத் தனமான நடிப்பில் அவர்களையே வெறுக்கு மளவுக்கு நடை முறையில் உள்ளவற்றை எடுத்துக் காட்டியுள்ளார்கள். கொஞ்சம் மிகையாக இருந்தாலும் உண்மையை  தானே எடுத்துரைகிறார்கள்.




இதை விட அன்பு, பாசம், கோபம், கவலை, வலி, வேதனை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லா வற்றையும் அதனால் ஏற்படும் உணர்வுகளை அறியாத வரும் புரியாத வரும் உணர்ந்து கொள்ளக் கூடியதாகவும் உருவம் கொடுத்து பின்னப் பட்டது தான் சினிமா. கண்முன்னே காட்சிகளாய் விரிந்திட அவற்றுடன்  சேர்ந்து நாமும் அழுது சிரித்து அதனுடன் ஒன்றிப் போய் விடுவோம். அது தான் நல்ல நடிப்புத் திறமை, இதை பொழுது போக்குக்காக மட்டுமே பார்ப்பது என்பது வேதனையான விடயம் தான். அசலை பற்றி அறிய நகலைப் பற்றி தெரிந்திருந்தால் இலகுவானதாக இருக்கும். கசப்பு பற்றி தெரியும் போது தான் இனிப்பின் அருமையை உணர்ந்து கொள்ள முடியும்.  இதற்கு தான் நிழலின் அருமை வெய்யிலில் தான் தெரியும் என்பர்.



நல்லதும் தீயதும் எல்லாப் பொருட் களிலும் எல்லா உயிர்களிலும் எல்லா நாட்டவர்களிலும் இருக்கத் தான் செய்கின்றன. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு  தான். இதற்கு சினிமா மட்டும் என்ன விதி விலக்கா? நல்லதையும் தீயதையும் நாட்டு நடப்பையும் கண்முன்னே காட்சிகளாய் கொண்டு வந்து நிறுத்தும் சினிமா உண்மையில் தீயது அல்ல. களவு எப்படி போகிறது கற்பு எப்படி சூறை யாடப் படுகிறது என்பதை எடுத்துக் காட்டுவது தீய வழியில் திருப்ப அல்ல,  திருந்து வதற்காகவும், (பலியாகாமல்)  விருந்தாகாமல் தடுப்பதற்காகவும், விழிப்போடு இருப்பதற்காகவும் தான் என்று எடுத்து கொள்ள வேண்டும் என்றே எண்ணுகிறேன்.

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்  அவரவர் மன நிலையை சூழ்நிலையை பொறுத்ததே சினிமா மட்டும் தான் காரணம் என்று எடுத்துக் கொள்ளமுடியாது. நெல்லோடு புல்லும் வளரத் தான் செய்கிறது.  அதை பிடுங்கி எறிவது இல்லையா? அது போலவும் அன்னம் போல  பாலையும் தண்ணீரையும் பகுத்து எடுப்பது போல நாமும் பகுத்து எடுப்போம் நல்லவற்றை மட்டும். தீயதும் நல்லதும்  இனங் காண உதவுவதோடு, உலகம் முழுவதையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தா விட்டால் கிணற்று தவளையாக இருந்திருப்போம்.  சினிமா கெட்டவர்களையும் திருந்த சந்தர்ப்பம் கொடுக்கிறது. தீய காட்சிகள் ஏற்படுத்தும் விளைவுகளும் வேதனையும் கண்டு திருந்த வாய்ப்புண்டு என்றே எண்ணுகிறேன்.

சரித்திரம், புவியியல், விஞ்ஞானம்  மட்டு மல்லாமல் பாரம் பரியங்கள் பக்தி ஊட்டும் நல்ல திரைப் படங்களும் உள்ளன. சரஸ்வதி சபதம்,
திருவிளையாடல்,தெய்வம் இப்படி எத்தனையோ, சகோதர பாசம் கொண்ட பாச மலர், ராஜபார்ட்ரங்கதுரை, தங்கைகோர் கீதம்,போன்றவை மட்டுமல்லாமல் வறுமை, கொடுமை யினையும் எடுத்துரைக்கிறது. பல திரைபடம்  தலைப்பிலேயே நல்ல கருத்தை சொல்லும். நல்லறிவு பாடல்கள் புத்திமதி புகட்டும். காட்சிகள் கண் முன்னே நிறுத்தும் தத்ரூபமாக. குழந்தை தொழிலாளி, சாதி கலவரம், பசி தெரியாத பணக்காரன் பசியுணரவும், ஏழ்மையின் மன நிலையையும் எடுத்துரைக்கும், சீதனக்கொடுமை, பெண் உரிமை, பெண் அடிமை பற்றியும், மாமியார் மருமகள் கொடுமை, சித்திக் கொடுமை இவை பற்றி  புரிய வைக்கும்,  விழிப்புணர்வை ஏற்படுத்தும். அதே போல் நாம் செய்யக் கூடாது இது தவறு என்றும் தோன்ற வைக்கும்.

சினிமா பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அது மட்டும் அல்லாது லட்சக்கணக்கான குடும்பங்களை வாழ வைக்கிறது.
இப்பொழுது காலத்திற் கேற்ப திரைப்படம் மாறி இருந்தாலும் பணம் பண்ணுவதே நோக்கமாக இருந்தாலும் பெயர் புகழுக்காக ஈடுபட்டாலும் தன் கடமையை சரியாக தான் செய்கிறது. M.G.R(ரமச்சந்திரன்),  சிவாஜி, ரஜனி, கமல்,  விஜய், சூரியா இவர்கள் எல்லாம் நடிப்புத் திறனுக்காக மட்டு மல்லாது நல்ல நல்ல கருத்துகளை முன் வைத்து நடித்தமையாலேயே இன்னமும் நிலைத்து நிற்கிறார்கள். அதுவே சினிமாவின் வெற்றியை பறை சாற்றுகிறது. நகைச் சுவைகள் கூட அறிவு புகட்டும் வகையில் எத்தனையோ சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

ஆனால் தற்போது எல்லாம் அருகி வருகிறது. குழந்தைகளும் பக்குவம் அற்றவர்களும் தவறான வழியில் ஈர்க்கப் படும் விதத்தில் திரைப்படங்கள் வெளி வருகின்றன என்பது வேதனையே. பக்குவம் இல்லாதவர்களுக்காகவும், கலாச்சார சீரழிவு வராமல் இருக்கவும் வெளி நாட்டு கலாச்சாரங்களை புகுத்தாமலும், புகுவதால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துக் காட்ட வேண்டும். கலாச் சாரங்களையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் கூறப் படவேண்டும்.  மனிதாபிமானம் நிறைந்த, தன்னம்பிக்கையும் தைரியமும் ஊட்டக் கூடியதாக இருக்க வேண்டும்  இங்கிலீஷ் வின்கிலிஷ், தோணி போன்ற படங்கள் இந்தக் காலத்திற்கேற்ப நிறைய எடுக்கப் படவேண்டும்.

அது மட்டுமல்லாமல் சின்னத்திரை வழியாகவும் நல்ல கருத்துக்கள் சொல்லப் படுகின்றன. உதாரணமாக ஆபீஸ் என்று ஒரு நாடகம் போய் கொண்டிருக்கிறது எத்தனை பேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது. ஒரு நிறுவனத்தை பற்றியே அதன் கதை அமைந்திருக்கும். அதில் அனைவரும் அவரவர் பாத்திரங்களுக்கு ஏற்ப நன்றாகவே நடிக்கிறார்கள். அதிலும் விஸ்வநாதன் என்னும் பாத்திரம் வெகு சிறப்பு. அவர் அந்த பாத்திரத்துக்கும் மிகவும் பொருத்தமானவர். அத்துடன் திடமாகவும் தெளிவாகவும் பல நல்ல விடயங்களை எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்ககூடாது என்று சொல்லும் பாணி அனைவரையும் கவரக் கூடியது. அத்துடன் பரந்த மனப்பான்மையை வளர்க்கும் விதமாகவும், சொந்தப் பிரச்னையையும் வேலையையும் போட்டு குழப்பாமலும், எப்படிப் பட்ட மனப்பக்குவம் தேவை, ஒரு வேலையை சேர்ந்து செய்வதற்கும், நேரத்திற்குள் முடிப்பதற்கும் என்று இப்படி பல விடயங்களை அழகாக முன் வைக்கிறார். இப்படி பட்ட  விடயங்கள் நிறைய எடுக்க வேண்டும். அதற்காக நான் அப்படி படங்கள் வரவில்லை அல்லது எடுக்கவில்லை என்று சொல்ல வரவில்லை இன்னமும் எடுக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன். பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்  என்பார்கள்.  பணம் வாழ்கைக்கு அத்தியாவசியம் தான் ஆனால் பொது மக்களோடு தொடர்புடைய எந்த தொழிலும் பணம் மட்டுமே குறிக்கோளாக உள்ளவர்கள் செய்தல் ஆகாது. சேவை மனப்பான்மை உள்ளவர்களாகவும் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். உதாரணமாக ஒரு ஆசிரியர் அல்லது வைத்தியர் தன்னிடம் வரும் அனைவரும் நன்றாக வரவேண்டும் என்று எண்ண வேண்டும். இவற்றை உணர்த்தும் வகையில் திரைப்படங்கள்  நல்ல விடயங்களை  எடுத்து வந்தால்  சமுதாயமும்  வளரும் நாடும் சுபீட்சம் அடையும் அல்லவா? அதை விடுத்து நாகரீகத்தை வளர்ப்பதாக எண்ணி கலாச்சாரத்தை குலைக்க முயல்வதா?

குறைந்த ஆடைகளுடன் நடிப்பதை தவிர்க்க வேண்டும்,  வன் முறைகளால் குழந்தைகள் ஈர்க்கப் படுகிறார்கள் என்றும் ஆதங்கம் பரவலாக காணப்படுகிறது. ஆபாசமான காட்சிகளால் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து பார்க்க முடியாத நிலை வருத்ததிற்குரியதே. குடும்பத்தவர் கூடி இருந்து மகிழும் நேரமும் அது தானே. அது தவிர்க்கப் படுவதும் நியாயமில்லை என்பதும் என் தாழ்மையான கருத்தே. இல்லையேல் மிக மோசமான நிலைக்கு தள்ளப் பட்டு விடுவோம் என்பதில் ஐயம் இல்லை.

முன்னர் திரைப் படங்கள் ஒரு வரை முறைக்குள் இருந்தன.  அன்று பெண்கள் தெய்வமாகப் பார்க்கப் பட்டார்கள் மதிக்கப் பட்டார்கள். இன்று பெண்களை மதிப்பதாக மேடையில் தான் பேசப்படுகிறது, அன்னையர் தினமும் கொண்டாடப்படுகிறது. ஆண்டவனை நாம் யாரும் நேரில் பார்த்தது கிடையாது. திருவுருவச் சிலைகளாக திருக்கோவில்களில் மட்டும் தான் காண்கிறோம். ஆனால் நடமாடும் தெய்வங்களாக நாளும் உலா வரும் அன்பு தெய்வங்கள் நம் அன்னையர் தான். பொறுமையும் பெருமையும் உள்ளவர்கள் பெண்கள் தான் என்பதால் தான் நம் பூமியை தாங்குவதும் பெண் தெய்வமாக காணப்படுகிறது. ஆனால் அவர்களை களங்கப் படுத்தும் வகையில் தற்போது வர்த்தகப் பொருளாக தான் காண்பிக்கப் படுகிறார்கள். பெண்கள் போதைப் பொருளாகவும் பணிப் பெண்களாகவும் தான் பார்க்கப் படுகிறார்கள். அத்துடன் இப்போது அரை குறை ஆடைகள் அணிந்து ஆபாசமாக நடிப்பதற்கு பெண்களே தயாராக இருக்கிறார்கள். இதனால் குடும்பங்களில் குழப்பம் மிக விவாகரத்துக்கள் அதிகமாகிக் கொண்டும் குழந்தைகள் அனாதைகளாகவும் ஆகவேண்டிய சூழ் நிலைகள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றன.  விபரம் அறியாத குழந்தைகள் அதை பார்த்து வளர வேண்டிய சூழ்நிலைகள் உருவாகின்றன. இவை நல்லவர்களையும் குற்றம் செய்ய தூண்டு வதாகவே அமைகிறது. அத்துடன் சினிமாவிலும் காட்டும் வன்முறைகள் அதிகமாக அதிகமாக இது சமூகத்தில் குற்றங்கள் அதிகமாக வளர்வதற்கு ஏதுவாக உள்ளது. இது வலுவாக குறைய வேண்டும். குடி உடலுக்கு கெடுதி என்று எழுதுவது போல் வன்முறையும் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் கெடுதி என்றும், வன்முறையாக கண்டிக்கப்படும் என்று எழுதிப் போட வேண்டும்.  நல்ல கருவுள்ள படங்கள் கண்ணியமான முறையில் கலாச்சரம் கெடாமல் எடுக்கப்பட்டால் அனைவரும் திரைபடத்தை ஆதரிக்க தான் செய்வார்கள்.

எந்தத் திரைப்படமாக இருந்தாலும் நல்ல ஆழமான  கருத்தை முன் வைக்க  வேண்டும் அதில் கற்றுக்கொள்ள நிறைய இருக்க வேண்டும், அதாவது நியாயம், நீதி, நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு, தமிழ், தமிழ் கலாச்சாரம் அனைத்தையும்  கற்றுக் கொடுக்க வேண்டும். இனி வளரும் சமுதாயம் வளமாக வாழ திரைப்படம் காரணமாக இருந்தால் அதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும். நாமும் சமூகமும் சொல்வதை விடவும் ரஜனி, கமல் போன்ற நடிகர்கள் சொல்லுகின்ற விடயங்களை எந்த யோசனையும் இன்றி உடனேயே ஏற்றக் கொள்ளும் சமூகம் இது. சும்மாவா சொன்னார்கள், சும்மா மாடு சொன்னால் கேட்காது மணி கட்டின மாடு சொன்னால் தான் கேட்கும் என்று, என்றால் ஆடுற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் பாடுற மாட்டை பாடித் தான் கறக்க வேண்டும்.

ஔவையாரும் திருவள்ளுவரும் ஏனையோரும் இயற்றிய திருக்குறளையும் நீதி நூல்களையும் கொண்டு நெறிப்படுத்த முடியவில்லையே ஏன்?
அவை பெரும்பாலான மக்களை சென்றடை வதில்லை. இலகுவான முறையில் கற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அது இல்லை என்பது தான் உண்மை. இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தான் கற்றுக் கொள்கிறார்கள். ஏனையோர் கற்றாலும் கருத்து விளங்க வில்லை என்று போட்டு விட்டு போய் விடுவார்கள். இந்நிலையில் சினிமா அவற்றை எல்லாம் புரட்டிப் போடும் வகையில் பசுமரத்தாணிபோல் பதியும் வகையில் நடித்து விட்டால் போதும் சட்டென்று அனைவருக்கும் உறைக்கும் உறையும் மனதில். பச்சை குழந்தையையும் பாதிக்கிறது பஞ் டயலாக், அதையே உபயோகப் படுத்தி குறளையும், நீதி நூல்களையும் கற்றுக் கொடுக்கலாம். இதன் மூலமும் ஒழுக்கத்தையும் உயர்வையும் காப்பாற்றலாம்.  பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்ல சினிமா தீய பாதையை நோக்கி நகராது நல்ல விடயத்தை மட்டுமே சுமந்து நல்ல சமூகத்தை உருவாக்கி மேலும் மேலும் சிறப்புற வேண்டும். இதுவே இன்றைய சமுதாயத்தில் அனைவரது சிந்தனையும், விருப்பமும். பாரம்பரியம் கலாச்சாரத்தை கட்டிக் காக்க ஊடகங்களும் ஏனையோரும் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


பொறுமையாக வாசித்த, அனைவருக்கும் மிக்க நன்றி ...!  நடுவர்களுக்கும், இதனை நடத்திக் கொண்டிருக்கும் ரூபன், பாண்டியன் அவர்களுக்கும், தோள் கொடுக்கும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.