Monday, October 12, 2015

துவைத்திடுவாய் தோழா



Image result for இளைஞர்கள் images


கண்ணிறைந்த இளைஞர்களே கனவுகளைக் காண்க!
     கற்றுலகின் வளமறிக! கவின்கலையுள் ஆழ்க!
எண்ணமதில் நல்லறமே என்றுமனம் கொள்க!
     இன்றமிழில் மென்மொழிகள் நன்றுரைத்துச் சொல்க!
மண்ணிலுள்ள மாண்புகளை மதித்தென்றும் வாழ்க!
     மடிந்தாலும் மங்காத புகழுன்னைச் சூழ்க!
வெண்ணிலவு போல்வளர்க! விரைந்திருட்டை வெல்க!
     விரல்நுனியில் உலகுருளும் விதமறிந்து செல்க!


வீரமது விளையுமினம் வெற்றிகளம் ஆடு!
    வீழ்த்திடுமோ சிறுநரிகள்? விரட்டிடவே பாடு!
சோரமதுசுகந்தருமோ? சுழற்றிவிழ லோடு
    சுருட்டுமதன் வாழ்வினைநீ சுட்டெரித்துப் போடு!
ஊரினையும் உறவினையும் உணர்வெழும்பக் கூடு!
    ஊறழிக்க உளம்திருப்பி உவகையைக்கொண் டாடு
பாரமாக உலகிருக்க பழகுவது கேடு!
    படைஅறிவுப் புலம்வகுக்க பார்ப்பதுபண் பாடு!


வட்டமிடும் கண்களுக்குக் கட்டளைகள் இட்டு
    வகுத்துவிடு பாதைகளை வளர்களைகள் சுட்டு
திட்டமிடும் அறிவுவளம் தேடும்மனச் சிட்டு!
    திரும்பிவிடும் பாதையெலாம் தென்றல்விடும் மொட்டு!
சுட்டமண்ணும் பச்சைமண்ணும் சேர்ந்திடுமோ ஒட்டு?
    சேருமிடம் பார்த்தென்றும் சேர்ந்துவிடக் கற்று
விட்டபின்னர் தோல்வியெது? வெற்றியுனைத் தொட்டு
    விரும்பிடுதல் கண்டிடுவாய் வேதனைகள் விட்டு!


பெற்றோரைப் பெரியவரைப் பேணுகின்ற போது
     பேராசி காக்குமும்மை பெருந்துயரி னின்று
கற்பனைக்கும் மிஞ்சுகின்ற காரியங்கள் செய்து
     காலங்கள் யாவையும்நீ கட்டிப்பொன் னாக்கு!
முற்றிட்ட பகைகளையும் முடித்திடவே நீரும்
     முனைப்பாகச் செயல்பட்டு முன்னுரிமை கோரும்
குற்றங்கள் யாவையுமே குறைத்தழிக்க நாட்டில்
     கொடுநெஞ்சர் பிடியினின்று கொடுவாளை நீக்கும்!


தடைகளையே உடைத்தெறிந்தால் தரணிபுகழ் பாடும்           
     தலைவனென்றே எண்ணிடுவர் தக்கவர்கள் போற்றி
உடைகளையே மாற்றிடுவாய் காலமதற் கேற்ப
     உறுதிமொழி எடுத்திடுநீ உயர்வினையே பேண
படைதிரண்டு வந்தாலும் பகற்கனவா யெண்ணேல்
     பழிமுடித்த போதும்நீ விழிமூடித் தூங்கேல்
குடையின்கீழ் அணிவகுத்துக் கூட்டிவந்து ஓது
     கொஞ்சுதமிழ் காக்கின்ற தொண்டிற்க்கிணை ஏது?






Sunday, October 4, 2015

தோகைமயில் வாகன னேவா


துதிக்கின்றேன் உன்னையே நான் தூயவனே துணைநிற்க  
     தோகைமயில் வாகன னேவா
பதிபூசை செய்துன்றன் பதமலரரைப் போற்றிடுவேன்  
     பழிநீங்க வருள்வாய் கந்தா
மதியற்றுக் கிடந்தாலும் மடியேந்தி எனைநீயும்
     மகிழ்வாகக் காக்க வாராய்
விதியென்று என்னை நீ வெறுக்காமல் விரைந்தோடி
     வினைகளையும் களைய வாராய் 

 நிலையான நின்னோடு நினைவாக நிழலாக
      நிற்கின்ற நிலைமை வேண்டும்
இலையென்று சொல்லாத ஈயென்று கேளாத
      இணையில்லாத் திறமும் வேண்டும்.
உலையாற உயிர்களுக்கு உணர்வோடே உணவளிக்க  
      உதவுகின்ற உள்ளம் வேண்டும்
சிலைபோல நில்லாத சீயென்று சொல்லாத
      தெளிவான சிந்தை வேண்டும்

மாலவனே மாண்புள்ள மான்பிள்ளை மணந்தவுனை 
      மறவாத தன்மை வேண்டும்
பாலனென வந்தெமது பகைமுடித்த பெருமானே
      பகையின்றி வாழ வென்றும்
வேலேந்தி சூரனுடன் வீரமுடன் போர்செய்து
      விதிமுடித்த சூரனே வாராய் 
பாலாறும் நீயிங்கு பழச்சோலை தானிங்கு
       பசியாறிச் செல்ல வாராய்   

அலையோடு உறவாகி அதிலாறு முகமாகி
       அறுமுகன் ஆன பேறே
மலையாள மகிழ்வோடு மனம்நாடிச் சென்றங்கு
       வழுவாமல் வாழ்ந்த வேலா    
பலதுன்பம் பரவாமல் பழியேதும் நேராமல்
       பதிபாலன் எம்மைக் காப்பாய் 
மலர்ப்பாதம் தொழுகின்றேன் மனமொன்றி உரைக்கின்றேன்
                 மங்கை யென்றன் மனத்துள் சேர்வாய் !

Thursday, October 1, 2015

நாங்க ரெடி நீங்க ரெடியா




  Displaying INNER Back SidePAGE 1.jpg
பதிவர் விழாக் காண வரலாம்
பதிவர்களைப் பார்த்து வரலாம் 

வலையுலகுடன் கைகோர்க்க 
 என்னோடு வாருங்கள் 
சீக்கிரம் சீக்கிரம் புதுகை கண்டு வரப் 
புறப்படுங்கள்   புறப்படுங்கள் 




வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015 
புதுக்கோட்டையில் வரும் 11-10-2015 ஞாயிறு அன்று!
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 
(மேலும் விவரங்களுக்கு அழைப்பிதழ் பார்க்கவும்)
வலைப்பதிவர் நண்பர்களை 
வருக வருக 
வென வரவேற்கிறோம்!

Saturday, September 26, 2015

எழுக மனிதனே எழுக







Image result for ஓவியம் images



 

காற்று நடைபயிலக் கண்கள் சிறகடித்து 
       காணும் அத்தனையும் களமே 
    காலம் கரைகின்ற முன்னே கசடற்றுக்
        கருதி சேர்ப்பாயே உளமே!
போற்றும் நெறிநின்று பொழுதைப் பயனாக்கி 
        போதல் என்றென்றும் சுகமே 
     போதும் எனுமெண்ணம் பெருகி நிறைகின்ற 
         புத்தி பெறவேண்டும் அகமே!
கூற்று வந்தாலும் கொள்கைத் தடம்மாறா 
         கோலம் தனைக்கொள்க பலமே 
     கோபக் களைநீக்கிக் குழந்தை மனமாக்கிக் 
          கொள்க என்றென்றும் நலமே!
தேற்றும் அன்போடு தெளிந்த அறிவோடு 
         திகழ மனிதனே எழுக 
      தெளிந்த முன்னோர்கள் தந்த வழிகண்டு 
        தொழுக அவ்வழி ஒழுக!



சீற்றம் அறமெழட்டும் சிந்தை வலுப்படட்டும் 
        செய்கை பிறர் நலனைக் காணும் 
     செம்மை உளம்வரட்டும் செல்லத் தடமெழட்டும்
         சொல்லில் இனிமையெனும் தேனும்!
சேற்றை இறைக்கின்ற சின்னத் தனங்கண்டு
        சிரித்துப் போகின்ற தன்மை
       சொந்த மெனக்கொண்டு செல்க தடைவென்று
          சிதறிப் பகைநடுங்கும் உண்மை!
மாற்றம் நலமாக மனிதகுலம் வாழ
          மீட்டு செந்தமிழ் யாழை!
      மரபின் நெறிநின்று மாண்டு போனாலும் 
         மைந்து தருகின்ற வாழை!
ஆற்றல் அணுவிஞ்ச ஆளும் வலிபடைத்த
         ஆண்மை உனக்குண்டு தோழா
       அமைதி உலகுய்ய அழகு மதிபடைத்த 
           அருமை அறிவுகொண்டு வாடா!


வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் -எழுக மனிதனே எழுக எனும் தலைப்புடன் இதோ .
 “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழி கூறி இதை என் தளத்தில் வெளியிடுகிறேன்.நன்றி !