Sunday, October 4, 2015

தோகைமயில் வாகன னேவா


துதிக்கின்றேன் உன்னையே நான் தூயவனே துணைநிற்க  
     தோகைமயில் வாகன னேவா
பதிபூசை செய்துன்றன் பதமலரரைப் போற்றிடுவேன்  
     பழிநீங்க வருள்வாய் கந்தா
மதியற்றுக் கிடந்தாலும் மடியேந்தி எனைநீயும்
     மகிழ்வாகக் காக்க வாராய்
விதியென்று என்னை நீ வெறுக்காமல் விரைந்தோடி
     வினைகளையும் களைய வாராய் 

 நிலையான நின்னோடு நினைவாக நிழலாக
      நிற்கின்ற நிலைமை வேண்டும்
இலையென்று சொல்லாத ஈயென்று கேளாத
      இணையில்லாத் திறமும் வேண்டும்.
உலையாற உயிர்களுக்கு உணர்வோடே உணவளிக்க  
      உதவுகின்ற உள்ளம் வேண்டும்
சிலைபோல நில்லாத சீயென்று சொல்லாத
      தெளிவான சிந்தை வேண்டும்

மாலவனே மாண்புள்ள மான்பிள்ளை மணந்தவுனை 
      மறவாத தன்மை வேண்டும்
பாலனென வந்தெமது பகைமுடித்த பெருமானே
      பகையின்றி வாழ வென்றும்
வேலேந்தி சூரனுடன் வீரமுடன் போர்செய்து
      விதிமுடித்த சூரனே வாராய் 
பாலாறும் நீயிங்கு பழச்சோலை தானிங்கு
       பசியாறிச் செல்ல வாராய்   

அலையோடு உறவாகி அதிலாறு முகமாகி
       அறுமுகன் ஆன பேறே
மலையாள மகிழ்வோடு மனம்நாடிச் சென்றங்கு
       வழுவாமல் வாழ்ந்த வேலா    
பலதுன்பம் பரவாமல் பழியேதும் நேராமல்
       பதிபாலன் எம்மைக் காப்பாய் 
மலர்ப்பாதம் தொழுகின்றேன் மனமொன்றி உரைக்கின்றேன்
                 மங்கை யென்றன் மனத்துள் சேர்வாய் !

Thursday, October 1, 2015

நாங்க ரெடி நீங்க ரெடியா




  Displaying INNER Back SidePAGE 1.jpg
பதிவர் விழாக் காண வரலாம்
பதிவர்களைப் பார்த்து வரலாம் 

வலையுலகுடன் கைகோர்க்க 
 என்னோடு வாருங்கள் 
சீக்கிரம் சீக்கிரம் புதுகை கண்டு வரப் 
புறப்படுங்கள்   புறப்படுங்கள் 




வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015 
புதுக்கோட்டையில் வரும் 11-10-2015 ஞாயிறு அன்று!
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 
(மேலும் விவரங்களுக்கு அழைப்பிதழ் பார்க்கவும்)
வலைப்பதிவர் நண்பர்களை 
வருக வருக 
வென வரவேற்கிறோம்!

Saturday, September 26, 2015

எழுக மனிதனே எழுக







Image result for ஓவியம் images



 

காற்று நடைபயிலக் கண்கள் சிறகடித்து 
       காணும் அத்தனையும் களமே 
    காலம் கரைகின்ற முன்னே கசடற்றுக்
        கருதி சேர்ப்பாயே உளமே!
போற்றும் நெறிநின்று பொழுதைப் பயனாக்கி 
        போதல் என்றென்றும் சுகமே 
     போதும் எனுமெண்ணம் பெருகி நிறைகின்ற 
         புத்தி பெறவேண்டும் அகமே!
கூற்று வந்தாலும் கொள்கைத் தடம்மாறா 
         கோலம் தனைக்கொள்க பலமே 
     கோபக் களைநீக்கிக் குழந்தை மனமாக்கிக் 
          கொள்க என்றென்றும் நலமே!
தேற்றும் அன்போடு தெளிந்த அறிவோடு 
         திகழ மனிதனே எழுக 
      தெளிந்த முன்னோர்கள் தந்த வழிகண்டு 
        தொழுக அவ்வழி ஒழுக!



சீற்றம் அறமெழட்டும் சிந்தை வலுப்படட்டும் 
        செய்கை பிறர் நலனைக் காணும் 
     செம்மை உளம்வரட்டும் செல்லத் தடமெழட்டும்
         சொல்லில் இனிமையெனும் தேனும்!
சேற்றை இறைக்கின்ற சின்னத் தனங்கண்டு
        சிரித்துப் போகின்ற தன்மை
       சொந்த மெனக்கொண்டு செல்க தடைவென்று
          சிதறிப் பகைநடுங்கும் உண்மை!
மாற்றம் நலமாக மனிதகுலம் வாழ
          மீட்டு செந்தமிழ் யாழை!
      மரபின் நெறிநின்று மாண்டு போனாலும் 
         மைந்து தருகின்ற வாழை!
ஆற்றல் அணுவிஞ்ச ஆளும் வலிபடைத்த
         ஆண்மை உனக்குண்டு தோழா
       அமைதி உலகுய்ய அழகு மதிபடைத்த 
           அருமை அறிவுகொண்டு வாடா!


வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் -எழுக மனிதனே எழுக எனும் தலைப்புடன் இதோ .
 “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழி கூறி இதை என் தளத்தில் வெளியிடுகிறேன்.நன்றி !

Thursday, September 17, 2015

புறப்படு புறப்படு புறப்படு

 

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட 
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
  
ஆமா ஆமா 
இன்னிக்கு இங்க நாம எல்லாம் ஏன் கூடியிருக்கோம் தெரியுமா 
ஆமா  ஆமா சொன்னாத் தானே தெரியும் 
ஏங்க கூடியிருக்கோம் அவசரப் படாத தம்பி இரு இரு 

அதுக்குத்தானே வந்திருக்கேன் நல்லா
அளக்கப் போறேன் கேளு தம்பி 

அப்பிடியா
ஆமா அப்புறம்  சொல்லுங்கண்ணா ஆமா

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
 தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட

புதுக்கோட்டைக்கு  போகப்போறோம் நம்ம
 பைந்தமிழை பரப்பப் போறோம் 

அப்பிடியா அண்ண 
அப்பிடி என்ன விசேஷம் 
அங்க இருக்குண்ண அதுவா

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட

வலப்பதிவர் எல்லோரும் கூடப் போறோம் நாங்க
வக்கணையா சேர்ந்தங்கு பேசப் போறோம்.
விருந்தும் சேர்ந்து உண்ணப் போறோம்.
ஆமா விருந்தும் சேர்ந்து உண்ணப் போறோம்

வித்தகரை எல்லாம் காணப் போறோம் நல்ல
 வித்தைகளும் அங்கு செய்யப் போறோம் 
ஆமா வித்தைகளும் அங்கு செய்யப் போறோம்

 விருந்தும் உண்டா ...அட அப்பிடியா அண்ண அப்ப நானும் வர்றேன் தானே இல்ல அண்ண 
ஆமாட சாப்பாட்டு ராமா 
அண்ண வேண்டாம் இப்பிடி சபையில வைச்சு மானம் கெடுத்தாதீங்க அண்ண 
சரி சரி  உள்ளதைத் தானேடா.சொன்னேன்.. ம்..ம் கோபத்திற்கு மட்டும் குறைச்சல் இல்ல ....

குறுக்க குறுக்க பேசாதே அப்புறம் நான் மறந்திடுவன் பேச வந்ததை 
சரி அண்ண ஆமா ஆமா

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட

போட்டிகளும் வைக்கப் போறாங்க நல்ல
பொக்கிஷங்கள் கொடுக்கப் போறாங்க
கூட பரிசுகளும் வழங்கப் போறாங்க
ஆமா பரிசுகளும் வழங்கப் போறாங்க

ஆமா ஆமா என்ன பொக்கிஷமா அண்ண அது என்ன 

அதுவா நல்ல நூல்கள் எல்லாம் வெளியாகிறது இல்ல 
அதைத் தாண்டா சொன்னேன்.  சரி இப்படியே பேசிட்டு இருந்தா ஆவாது 

புறப்படு புறப்படு புறப்படு 
பதிவர் திருவிழாவை காணுவோம் புறப்படு

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட

 அட நாம போக முன்னம் பதியணுமே 
முதல்ல இரு இங்கப் போய் முதல்ல பதி இல்லாட்டி சாப்பாடு அம்போ தான்.  

அத்துடன் இந்தக் கையேட்டுக்குத் தகவல் பதிவு செய்யணுமே ம்..ம் அப்புறம் என்ன சரி இப்போ விபரம் எல்லாம் சொல்லிட்டேன்ல என்னடா பேந்தப் பேந்த முழிக்கிற சொல்லிட்டனா இல்லையா ஓ இரு இரு
முக்கியமான விடயத்தை சொல்ல மறந்துட்டேன் 

துண்டுப் பிரசுரத்தை எல்லோர்க்கும் கொடுதிட்டுவா சரி அண்ண இந்தா ...
போட்டிக்கு கட்டுரையோ கவிதையோ போய் எழுது போ....  

நானா எனக்கு என்ன அண்ண தெரியும் ஆமா வைத் தவிர   போட்டிக்குக்

“வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென, தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கு விவரம் வருமாறு :-

NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI TOWN BRANCH
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320


(இந்த வங்கிக் கணக்கு கணினித்தமிழ்ச்சங்க நண்பர்களின் ஆலோசனைப்படி, “நல்லாசிரியர்” திரு பொன்.கருப்பையா அவர்கள் உள்ளிட்ட இருவர் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. ஆயினும் ஒருவர் பெயர் குறிப்பிட்டாலே போதுமானது)

இந்தக் கணக்கின் வழி நன்கொடை செலுத்துவோர், நன்கொடையாளர் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை முதலான விவரங்களை bloggersmeet2015@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ, +91 94431 93293 எனும் செல்பேசி எண்ணுக்கோ (குறுஞ்செய்தி) தகவல் தெரிவித்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
 இந்த விபரம் தேனுக்கிட்ட இருந்து சுட்டது நன்றிம்மா தேனு 

Monday, September 7, 2015

என்நாவில் வந்துகுடி ஏறு!


ஒன்றில் நான்கு


  
பஃ றொடை
மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே! 
மென்மொழியே!  ஈடில்லாத் தென்மொழியே! - இன்பமுடன்
உன்னோடு காலமெலாம் ஒன்றி உறவாடச்
சின்னஞ் சிறுகிளியே! சித்திரமே! - அன்னையே! 
என்நாவில் வந்துகுடி ஏறு!



நேரிசை

மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே! 
மென்மொழியே!  ஈடில்லாத் தென்மொழியே! - இன்பமுடன்
உன்னோடு காலமெலாம் ஒன்றி உறவாட
என்நாவில் வந்துகுடி ஏறு!



சிந்தியல் வெண்பா

மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே! 
மென்மொழியே!  ஈடில்லாத் தென்மொழியே! - இன்பமுடன்
என்நாவில் வந்துகுடி ஏறு!



குறள் வெண்பா



மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே! 
என்நாவில் வந்துகுடி ஏறு!




பஃ றொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசை வெண்பா வர வேண்டும்!
நேரிசை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசைச் சிந்தியல் வெண்பா வர வேண்டும் !
நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
குறள் வெண்பா வர வேண்டும் !



Saturday, September 5, 2015

கொத்துமலர் பூங்கொடியே

Image result for சரஸ்வதி images gif

 பட உதவிக்கு  நன்றி  google  

வாமகளே வாணியளே வல்லதமிழ் தந்துதவ
      வந்திடுவாய் எந்தனக வீடு !
            வண்ணமகள் வந்துனது வல்லமையைக் காட்டியெனை
                 வாழ்வுயர தந்திடுவாய் ஏடு!

தாமதமாய் வந்துதித்தால் தாயுனைநான் ! நொந்திடுவேன் 
      தங்கமகள்  வந்தெனையே நாடு !
           சாமரையும்  வீசிடுவேன் பாமறையும் தீட்டிடுவேன்
              சந்தமுடன் சிந்திசையை சூடு !

கோமகளே குன்றிணொளி கொண்டிருக்கும் குற்றமிலாக் 
       கோமளமே நீயணிந்த தோடு!
            கொத்துமலர் பூங்கொடியே கோலமுடன் சீர்தருவேன்
                கூவுகுயில் போலிசைத்துப் பாடு !

தாமரையில் வீற்றிருக்கும் நாமரையின் நாயகியே
     தந்திட ..வா தண்டமிழர் நாடு !
          தையலெனைக் கண்டதுமே தாவியணைத் தூக்கிடுவாய்
               தந்ததன தாளநடை போடு! !

Tuesday, September 1, 2015

பூந்தளிரே உன்முகத்தைக் காட்டு!




Image result for சரஸ்வதி images


 பூமகளே பொன்மகளே போடுகிறேன் முத்துநகை  
      பூந்தளிரே உன்முகத்தைக் காட்டு!
            பூவகையை  பாவகையுள் பொன்னெழிலாய்க் கோர்த்திடவே
                   பொற்புடனே நல்லருளைச் சூட்டு!

நாமகளே நல்லதமிழ் நாவினிலே ஊறிவர  
        நல்லறிவை நெஞ்சினிலே நாட்டு!
             நானிலமும்  சேர்ந்துவந்து நானெழுதும் சிந்தனையை
                நாடிடவே தந்திடுவாய் பாட்டு !  

  கோமகளே கொஞ்சுதமிழ்க்  கோலமிடும் கைங்கரியம்
        கொண்டுவந்து என்றனுக்கு நீட்டு !
             குற்றமற்ற தீந்தமிழில் கூவிடவே வேண்டுகிறேன்
                 கொத்துடனே கொண்டுவந்து ஊட்டு !

பாமகளே உன்றனுக்குப் பாற்குடமாய் வார்த்திடுவேன்
       பண்புடனே பாவணியைத் தீட்டு!
           பத்துவிரல் மோதிரமும் பார்த்துனக்கு போட்டிடுவேன்
                பாங்குடனே என்னறிவைக் கூட்டு!