Tuesday, December 30, 2014

வருவாயே புத்தாண்டே வளங்கள் நல்கிடவே

 
வலைதள உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்


வருவாயே புத்தாண்டே வளங்கள் நல்கிடவே
கருவாய் இருப்பாயே காலத்தை வென்றிடவே
பெருகும் நற்பணிகள் உருகும் உளநலன்கள்
தருவாய் நிறைவாக நாடுகள் நலம்பெறவே

சீரும் சிறப்பும் சேர்ந்திட வேண்டும்
வாரும் எண்ணங்கள் விலகிட வேண்டும்
போரும் நீங்கிடவே புரிந்துணர்வு வரவேண்டும்
பாரும் மகிழ்ந்திடவே  நற்பலன்கள்  தருவாயே

ஈழத்தில் துன்பங்கள் இன்றோடு ஒழிந்திடவும்
பழமாக வெற்றிகள் பெறவேண்டும்  காரியங்கள் 
களையின்றி பயிர்வளர்க்க கவனங்கள்  பெறவேண்டும்
விளைச்சலிலே  வர்த்தகமும் வானுயரும் நிலைவேண்டும்

தேரோடும் வீதியிலே போராட்டம் இல்லாமல் 
வேரோடும் ஆல்போன்று  விழுதுகளாய் தாங்கிடவும்
பேரோடு வாழ்ந்திடவே பெற்றோரின் பிரியங்களும்
நீரோடு போகாமல் நிலைத்திடவும்  வரம்வேண்டும் !

நோய்நொடிகள் விலகிடவும் நொந்தமனம் தேறிடவும்
வாய்மை பேணியங்கு வல்லரசு அமைந்திடவும்
சேய்கள் கூடிநற் செயல்கள் புரிந்திடவும்
தூய்மை எங்குமே துலங்கிடவும் வரவேண்டும்

 இல்லையென்று சொல்லாத நிலையங்கு வேண்டும்
தொல்லை எல்லாம் கடந்தங்கு  சுகம்காண வேண்டும்
முல்லை சிரிப்பங்கு முத்தாட வேண்டும்
மல்யுத்தம் காணாத மகிழ்வங்கு விரைவாகவேண்டும்

பொன்னோடு பூச்சூடி பொழுதெல்லாம் களிப்புடனே
கண்ணிலே மையிட்டு கட்டியவன் வரவைஎண்ணி 
காதலுடன் காத்திருக்கும் கனவுநனவாக வேண்டும்
மோதல்கள் ஏதுமின்றி காதல்ஏக்க முறவேண்டும் 

கோவில்கள் கோபுரமும் குறையின்றி நடந்திடவும்
காவிகளும் கவலையின்றி கண்மூடித் தூங்கிடவும்
காடுகளும் விலங்குகளும் வீடுகளில் வாழுகின்ற
மாடுகளும் நன்றிமிக்க நாய்களையும் பேணிடவும்

வறுமைகள் வற்றிடவும் வெறுமைகள் நீங்கிடவும்
பொறுப்புகள் பெற்று புதுமைகள் புரிந்திடவும்
வெறுப்புகள் அகன்று விருப்புகள் தோன்றிடவும்
மறுப்புகள் இன்றிமனிதம் பெருகிடவும் வேண்டும்

வருகபுத்தாண்டே வருகவருக புத்தாண்டேவருக 

Friday, December 26, 2014

வண்ணத்து பூச்சிகள் போல வாடாமல் சாகிறது


    

related searches love failure quote in tamil best love failure ...
ஆளானநாள் முதலாய் 
     என்னைக் காணாம தேடுகிறேன்
தோளோடு தோள் சேர
     நான் தூங்காமல் வாடுகிறேன்
அந்திபகல் உன்நினைவே
    அழகான பெண்மயிலே
சிந்தும்உன் புன்னகையில்
    சிதறும்செம் மாதுளையே
Love Failure!


பூங்கோதையே உன்தன்
     பூங்குழலும் வேய்ங்குழலே
பூங்காற்று வீசிடவே மனம்
     போராடும் தாங்காமலே
துள்ளும் இளமானே நீ
     எந்தன் பேரழகே
முள்ளின் மேல்பூத்த
     முத்தான ரோஜாவே

வள்ளங்கள் போல்வாழ்வு 
      வெள்ளத்தில்  செல்கிறது
உள்ளத்து  வலியோடு
     உன்காதல் வாழ்கிறது
வண்ணத்து பூச்சிகள்போல்
     வாடாமல் சாகிறது
எண்ணத்து ஆசைகக ளெல்லாம்
     எழுதாமல் அழிகிறது

உளிதேடி வந்தென்னை
     உடைக்கிறது யிரோடு  
செதுக்காத சிலையாகத்தான்  
    சிரிக்காமல்   வாழ்கிறது   
செந்நீரும் தோன்றாமல்
    வெந்நீரில் மூழ்கிறது 
கன்னங்கள் கண்ணீரில்
    நனையாமல் கரைகிறது 

நினையாமல் செல்கிறது
     நீண்டே காலங்கள்
மனையின்றி மகிழ்கின்றேன்
     மனதோடு வாழ்கின்றேன்
முளைக்கின்ற காதலிங்கு
    முளையாமல் கருகிறதே
உழைக்காமல் உண்பது போல் 
     உணர்கின் றேன்உயிரே

அழையாத விருந்தாளிபோல்
     அழுகின்றேன் அன்பே  
மழையில் நனைகின்ற
     மடியாகின்றேன் மானே
முகிழும் முனதன்பில்
     மடிசாய விழைகின்றேன்
விடியாதோ என்றெண்ணி
     விண்மீனைப் பார்க்கின்றேன்.

வெண்பா வாகியது பின்னர் இவை. எல்லாம் ஒரு முயற்சி தானே. பொறுமை காக்க வேண்டுகிறேன். நன்றி!

ஆளான நாள்முதல் நான்காணா மல்போனேன்
தோளோடுதோள்   சேரநானும்  தூங்காமல் வாழ்வேனே
முள்ளின்மேல் ரோஜாபோல் துன்பத்தில் இன்பமே   
கொள்வேனே காண உனை ! 

திண்டாடி போவேன் தினம்உன்னைக் காணாமல்
மன்றாடிக் கேட்பேன் மடிப்பிச்சை போடம்மா
கண்ணோடு தான்வாழ்வாய் விண்ணோடு போனாலும்
புண்ணாகும் இல்லை எனில் !

தள்ளாத போதில்நான் தள்ளாடி வீழ்ந்தாலும் 
கொள்ளாத உன்நினைவை தள்ளாது வாழ்வேனே 
காணாத போதினிலும் நான்மாலைத் தாமரையே 
வீணாகிச் சாதல் விதி !

Monday, December 15, 2014

கொஞ்சும்உன் ஞாபகங்கள் கொல்கிறதே!



வாழ்க்கைத் துணையென வாய்த்து,  வளம்பெற
வாழ்வில் இனிமைதனைச்  சேர்த்து,  மெழுகென
இல்லறம் கண்ணாய் இருளா தொளிர்கின்ற    
நல்லறம் செய்தாய் நயந்து !

நெஞ்சம் விழுந்தழவே தஞ்சமென வாரியெமைக்
கொஞ்சும்உன் ஞாபகங்கள் கொல்கிறதே! - மிஞ்சயெமை
நெஞ்சில் இருத்தி நிழலாய்த் தவிக்கவிட்டேன்
பஞ்சாய்  அகன்றாய் பறந்து!

வற்றாத பாசமழை வாழ்வை அமுதாக்கக்
கற்றதுன்னால் அம்மா! கனவிதுவோ? வெற்றாய்த்
திரியும் உடல்தவிக்கத் தாயேயேன் போனாய்
எரியும் நெருப்பிலெனை யிட்டு!


அம்மாநின் அன்பும் அருளும் இருந்தால்பின்
எம்மா இடர்வரினும் என்ன?  நிறைபலமே !
அன்னையாய்  உன்னை அடைந்தோம் பெருவரமே
இன்றிழந்தோம் காக்கும் இமை!
 

பாலூட்டி ச் சீராட்டிப் போராடி உன்னன்பின்
சோறூட்டித் தாலாட்டிச்  சோதனையை நீயேற்று
மெய்வருத்தம் பாராதூர்  மெச்சிடவே நீவளர்த்தாய்
அய்யோ!ஏன் போனாய் அகன்று!

தள்ளாடும் எம்மைஉன் தோள்தாங்கும்! கண்ணீரே
உள்ளோடும் என்றாலும் உன்சிரிப்பால் -  பிள்ளை‘‘யாம்
வாழ்தற்கும் நன்றாய் வளர்தற்கும் நின்துணையே
ஏழ்பிறப்பும் வேண்டும் இனி!

மாமியென்  றெண்ணாமல் மாசில்‘தாய் ஆனீரே  !
சாமி அருளெனவே சாதித்தோம், சோதனையாய்
பாவியெமை விட்டுப் பிரிந்தீரோ? இன்பிறவிச்
சாவியுண்டோ மீட்கவுமை சொல் !

திருவிளக்கே உம்மைத் தொலைத்தோம் விதியே
இருளில் கிடத்தல் இனிதகுமோ? அன்புறையும்
இன்முகம் தென்படுமோ எங்கேனும் என்றெங்கள்
கண்கள் அலையுதலைக் காண் !

கண்ணுக்குள் வைத்தெம்மை காத்தாயே    பாட்டி 
கருத்தினில் என்றும்  கலந்தாய்! – மருந்தாகி
எண்ணத்தில் தேன்போல்  இனித்தாய்‘உன் அன்பெண்ண  
கன்னத்தில்  கண்ணீர்க் கரை!

அன்பொடு பாசம் அடக்கம் அருங்குணங்கள்
இன்பம் நிறைகின்ற இல்லறப்பண் – துன்பம்
துடைக்கின்ற உன்கரங்கள் எங்கே‘என் அம்மா
உடைத்தணைத்தல் என்றோ உனை?

ஆசை முகம்மறத்தல் ஆமோ அருள்விளங்கப்
பூசையிட் டெண்ணுவம்‘உம் புன்னகையை -  மாசில்லா
அன்பில் உறவொருங்கே ஆன்மாவின் சாந்திக்காய்
ஒன்றிணைவோம் நல்(கு)‘உன் ஒளி!

பட்ட மரமானோம் பாவியெமை விட்டுவிட்டுக்
கெட்டமனக் காலனுனைக் கொண்டதென்ன -  சுட்டதனால்
என்றகன்று போகும் எமனே? நினைவாலே
என்றென்றும் வாழ்வாள் அவள்!

ஐயைய மூக்கில இருந்து கையை எடுங்க இது ஒன்றும் முழுக்க நான் எழுதவில்லை நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம். எங்க ஆசான் விஜு அவர்களோட கை வரிசை தான் நான் சும்மா எழுதிக் கொடுத்ததை அழகா திருத்திக் கொடுத்துள்ளார். ஹா ஹா ...நல்லா ஏமாந்து விட்டீர்களா அட இனியா இப்படி எழுதுகிறாரே என்று இல்லையா.? ம்..ம்..ம்.. இப்ப தான் தெரிஞ்சிடுசில்ல அப்ப சட்டு புட்டுன்னு கருத்தை போடுங்கப்பா. என்ன இதுக்கு கருத்து இல்லையா  போடமாட்டீங்களா? இது கொஞ்சம் கூட நல்லாயில்லை சொல்லிட்டேன். இப்படி என்றால் நான் சொல்லாமல் விட்டிருப்பேனே. ......

இது என் friend டினுடைய மாமிக்காக எழுதியது. பேப்பர் ல் போடுவதற்காக.

Monday, November 17, 2014

நேற்று பிறந்த காளானும் நேரில் நின்று போராடும்

                

காற்றுக்கூட கதை பேசும்
கனிவு இன்றி குறைகூறும்
மாற்றம் மட்டும் மாறாமல் 
மனிதம் தன்னை சிறைபோடும்

நேற்று பிறந்த காளானும்
நேரில் நின்று போராடும்
ஊற்றுப் போல உருகாமல்
உள்ளம் தன்னை உடைத்தேகும்

வற்றாது வார்த்தை கடல்
வாழ்த்திபாடு தினந் தோறும்
பொற்காலம் என்றே எண்ணி 
புதுமை கீதம்தனைப் பாடும்  

போற்றிப் பேசிப் பழகாமல் 
புறணி பேசக் கூடாது  
மாற்றிப் பேசி மற்றவரின்
மனசை கெடுத்தல் ஆகாது

தோற்றுப் போனால் தைக்காது
பேசிப் பழகு தேற்றிடவே
தோற்றுப் போனால் ஜெயித்தவரை
தூற்றித் திரியக் கூடாது

தோற்றுப் போனால் ஜெயித்தவரை
தீர்த்துக் கட்டத் துடிக்காதே
தூற்றித் திரிவோர்  தனைக்கண்டால்
தொடர்ந்து செல்லக் கூடாது

கூற்று வனைக் கண்டாலும்
கொடுமை கண்டு அஞ்சாதே
பற்றிப் படரகொழு கொம்பாய்
வாழ வாழ்வு அழகாகும்

கொற்ற வன்றன்  கூற்றுக்குக்
கட்டுப்  பட்டே  வாழோனும்
கற்றுத் தேர்ந்த பின்னாலும்
கெட்டுப் போகக் கூடாது


வேற்று மனிதர் வாழ்வினிற்கு
வேட்டு வைக்கக் கூடாது
சீற்றம் கொண்டு சொந்தத்தை
சேதம் செய்யக் கூடாது


Saturday, November 8, 2014

தென்றலும் என்னை தீண்டிடுமே மின்னலும் என்னை மென்றிடுமே


  
எதிர்பார்த்து  காத்திருக்கிறது ஏக்கங்களோடு
கலைந்த கனவுளை காண
 
தாயின் முகம் பார்க்க தவிக்கும் 
இந்த பிஞ்சு உள்ளம்
 

அம்மா அம்மா எந்தன் உயிரே
      இது உன்பால் வந்தபயிரே
இம்மாம் பெரிய உலகில் நான்
      தவிக்கின்றேனே தனியே
வையத்தில் அன்பு மிகுமோ  நீ
       வான் போல்தரும் மழையோ
ஐம்பொன் நிறமுமுனதோ  - நீ
       அழகான சிலையோ


ஆணாக பெற்றிருந்தால்
      ஆற்றங் கரையெனக்கு
அடைக்கலம் தந்திருக்கும்
       பெண்ணெனவே பதறுகின்றேன்
பாவி புகலிடம் தேடுகின்றேன்
       பதுங்கி வாழ்வதற்கு-என்
பெண்மையும் எனக்கு பகையானதே
      பகலும் எனக்கு இருளானதே

காட்டில் ஒளிரும் நிலவானேன்  
       வீட்டினுள்ளே சிலையானேன்
பாலைவனத்து சோலை நான் 
       மாலைநேர தாமரை தான்
முள்ளின் மீது மலர்ப் படுக்கை
      முகம்  திருப்பும் கண்ணாடி
பசுத்தோல் போர்த்திய புலிகளம்மா
       பார்வையாலே கொல்லுமம்மா

தென்றலும் என்னை தீண்டிடுமே
         மின்னலும் என்னை மென்றிடுமே
வர்ணன் வந்தென்னை  வாழ்த்திடுவானா
         கர்ணன் மீண்டும் பிறப்பெடுப்பானா
கழுகுகள் என்னை காத்திடுமா -ஆல்
        விழுதுகள் இன்றி வேர் விடுமா
வாழ்தல் இங்கு சாத்தியமில்லை
        மானம் காக்க மதிகொடு தாயே

பெற்றவர் உள்ளவரே தத்தளிக்க - நான் 
       உற்றவருமின்றி கலங்குகின்றேன்
கற்றவரும் இங்கு கதை பேச 
       காட்சிப் பொருளாய் ஆனேனே
விற்பவர் என்னை களவாடி
      விற்றிடுவாரே ஊர்மேலே
பற்பலரும் போற்றும் பரமனவன்      
      பொற்பதங்கள் நல்கும் அடைக்கலமோ

வீதியிலே என் வாழ்வம்மா   
விதி முடிக்க வருவாயே

அம்மா உன் அடி தொடர வழி கட்டுவாயே

Saturday, October 25, 2014

திருடுவது தப்பில்லையா இதயங்களே ஆனாலும்

     
நிலைக்குமா இம்மகிழ்ச்சி 
நிலைத்தால் எதுவரை ?

நீ அழத் தொடங்கும் வரை

crying gif photo: Crying Fairy cartoon_354.gif
வாழ்வு ஏது வெந்து போனால்
தாழ்வு நீளும் நொந்து போனால்
அழவைப்பவரை 
அலட்சியம் செய் லட்சியம் வெல்ல



நகைப்பதற்கே நகைசுவைகள்  
நெஞ்சம் புகைந்தால்
சுவைக்காது பகைக்கும் 


   
 

உதிருங்கள் வார்த்தைகளை 
நெருடும்படியாக இல்லாமல் 
வருடும்படியாக 
அவை
வளர்க்கும் நல்லுறவுகளை 



 திருடுவது தப்பில்லையா 
இதயங்களே ஆனாலும்






Tuesday, October 21, 2014

தீபாவளியே வருக வருக

 வலை தள உறவுகள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்


தீபாவளியே வருக வருக
தீமைகளெல்லாம் விலக
தீபங்கள் எல்லாம் எரிக- அதில்
தீவினையெல்லாம் ஒழிக!

தேசங்கள் வாழ வருக-அதில்
நேசங்கள் நெய்திட வருக
ஆசைகள் அருகிட வருக-அன்பு 
பாசங்கள் பெருகிட விடுக

மோசங்கள் எல்லாம் தகர்த்து
வேசங்களையும் கலைத்து -நல்
வாசங்கள் வாழ்வினில் விதைத்து-பன்னிரு

மாசமும்  மகிழ்வினை நிறுத்து

வனத்தில் வாழும் மிருகங்கள்போல்
சினத்தில் வாழும் மனிதர்கள்-தலை 
கனத்தில்  மிகுந்து வாழ்பவர்தம் 
மனதில் இருளை அகற்று

மக்களையெல்லாம் திருத்திடு- நல்ல 
பூக்களாக மாற்றிடு -உயர்ந்த 
நோக்கங்கள் கொண்டிட வழிவிடு- நல்
ஆக்கங்கள் நல்கிட அருள் கொடு  

நிம்மதி எங்கணும் பெருகிட
சுபமங்கலம் எங்கும் பொங்கிட 
தீப ஒளியாய் வருக வருக
ஒளி வெள்ளம் எங்கும் பெருக



Saturday, October 18, 2014

வாழ்த்திட வாருங்கள் என் வலைதள உறவுகளே




அம்மாடியோ என்னால நம்பவே முடியலீங்க 
நூறு கவிதை போட்டுவிட்டேனா ?


வாழ்த்திட வாருங்கள் என்
வலைதள உறவுகளே
தாழ்ந்திடும் எண்ணம் தோன்றிடு
முன்னர் தடுத்திட வாருங்கள்

இன்னொரு நூறு கவிதைகளை
ஈந்திட வாழ்த்துங்கள்
பொன்னும்பொருளும் பொருந்தியபூமியில்
புன்னகை பூண்டிட வாழ்த்திடுங்கள்

மண்ணில் வளங்கள் செழிப்பது போல
மனமது செழிக்க வாழ்த்திடுங்கள்
கண்களிலே கார்காலம்
கண்டிட வேண்டும் வாழ்த்துங்கள்

பூக்களை போல பாக்கள் எல்லாம் 
சொரிந்திட வேண்டும் வாழ்த்துங்கள்-நல் 
நோக்கங்கள் நிறைந்த ஆக்கங்கள்
நல்கிடவே வாழ்த்துங்கள்

கண்களை போன்ற கருத்துகளை
களிப்புற தாருங்கள்
எண்ணங்கள் இனியது ஏந்திடவேண்டும்
 என்றே வாழ்த்துங்கள்

தேனினுமினிய கவிதைகள்
தெவிட்டாமல் தர வாழ்த்திடுங்கள்
மின்னிட வேண்டும் எண்ணங்கள்
 என்றே மிகையாய் வாழ்த்துங்கள்

புதுமையான கருத்துகளை
புகுத்திட வாழ்த்துங்கள்
பதுமைகள் போல வாழாமல்-அதை
  பரப்பிட வாழ்த்துங்கள்

பண்ணுடன் கூடிய பாடல்களை
தரவே பணித்திடுங்கள்
விண்ணும் என்னை வாழ்த்திடட்டும்- என்
 மண்ணும் மகிழ வாழ்த்திடுங்கள்!

வலைதள உறவுகளுக்கு வந்தனம் என் வரிகளை எல்லாம் ரசித்து நற் கருத்துகளை வழங்கி முழு ஆதரவு தந்து நூறு கவிதைகள் வரை  வளர்த்துவிட்ட பெருமை எல்லாம் தங்கள் அனைவரையுமே  சாரும். பல நாடுகளில் இருந்து பார்வையிடும் உறவுகளுக்கும், ஒத்துழைப்பு நல்கும்  என் குடும்பத்தினர்  அனைவருக்கும், ஊடகங்களுக்கும், முக்கியமாக itr.fm வானொலிக்கும், என்னுடன் பணிபுரியும்  நண்பர்களுக்கும்  என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தங்கள் வருகையையும் கருத்தையும் தொடர்ந்து நல்கி ஆதரவு வழங்க வேண்டும் என்று தாழ்மையோடு வேண்டுகிறேன்.







இழகிய குணங்கள்
அனைத்தையும் தன்னகத்தே
கொண்டவள்நீ 
அழகிய உலகிற்கே அதிபதி நீ 

அப்படி உன்னிடம் இல்லாதது என்ன  எம்மிடம்
இருக்கப் போகிறது என்று பார்க்கிறாய்.
ஓமனிதமா ...அது மரித்துவிட்டதோ
என்று பார்க்கிறாயா இன்னும் இல்லை தாயே
திரு முரளி திரு கரந்தை  ஜெயகுமார்
போன்றோர்களால் இன்னும் வாழ்ந்து கொண்டு தான்
இருக்கிறது எனவே நிம்மதி கொள்ளம்மா !
 

நடு நிசியில் இந்த
நிலவுக்கு இங்கென்ன வேலை
  நீர்வீழ்ச்சியை ரசிப்பதாக
 தெரியவில்லையே!
வானோடு தகராறோ
இந்த வண்ண நிலவுக்கு
  வாழ்வை  மாய்க்க
வந்திருக்குமோ என்னமோ



எப்படி அந்த நிலவு
ஆடை அலங்காரம்
இன்றியே இவ்வளவு
அழகாக உள்ளது
நான் ஆடை தரித்தும்
அழகாய்  இல்லையே


இதுக்கெல்லாமா கிளாஸ் 
நடத்துவாங்க 
கடிச்சா என்ன செய்கிறது
திருப்பி கடிக்கவா முடியும்
அதனால இப்படித்
தாங்க சொறியனும் ஆனால்
ஜாக்கிரதைங்க உள்ள இருக்கும்
உறுப்புகள் கையோடு 
 வராம பாத்துக்கங்க. ஆனால் கொஞ்சம்
அப்பப்ப ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.



ஏன் இப்படி ஒளிகிறாய் ஓ ...வெட்கமா 
காதலன் வரும் நேரமா என்ன

பார்த்த விழி பூத்திடவே 
பார்த்திருக்கிறாய் 
வேர்த்திடவே விதி யெனவே 
வாழ்ந்திருக்கிறாய்
 கனியும் இந்தக் காதல் 
என்றா காத்திருக்கிறாய்
பனியிலும் மழையிலும்
தோய்ந்திருக்கிறாய்
தனிமையே துணையாக 
வீற்றிருக்கிறாய்

தவிக்கும் உன் இதயம் தளர்ந்திடும்
தாய்மை உணர்வில் மிதந்திடும் 
உன்தலைவன் வரவே மகிழ்ந்திடும் 
தரணியில் இதுவும் நிகழ்ந்திடும்


பாறைக்குப் பின்னால ஏன் ஒளிஞ்சிருக்கே?

எதிரிகள்  நடமாட்டம் அதிகம் அதனால யாராவது
வர்றாங்களான்னு பார்க்கத் தான் 

எதுக்கு?....
என் நாட்டை சூறையாடப் 
பார்கிறாங்க இல்ல அதனால  
 குண்டு போடத்தான்

Sunday, October 12, 2014

நான் நிலவோடு சங்கமிக்கப் போகிறேன்


 

நான் தனிமை தேடி வந்தேன். இயற்கையை ரசிக்கத் தான் ஆனாலும் உங்களை பார்க்கவே பிடிக்கவில்லை கலைந்து விடுங்கள் சீக்கிரம் சீக்கிரம்.

 

கொஞ்சம் பொறு ஸ்ஞானம் செய்துவிட்டு வருகிறேன்.


நான் நிலவோடு சங்கமிக்கப் போகிறேன் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா. 
ஏன் தண்ணீரை ஆட்டுகிறீர்கள் நான்  என் அழகை அல்லவா ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஓவியமாகவும் காவியமாகவும் படைக்கும் என்னை 
நான் ரசிக்கக் கூடாதா என்ன.

அம்மாடியோ எம்புட்டு தண்ணி 
எப்பிடியம்மா இதைக் கடந்து வருவேன் . 

என்ன பார்க்கிறீங்க இவை உங்களுக்கு தரப் போறது இல்லை.  இது எனக்கு
மட்டும் தான் சீக்கிரம் இடத்தை காலி பண்ணுங்க. என்னோடு பழகலாம் ஆனால் எதையும் எதிர்பார்க்கக் கூடாது.

 

என்ன கவலையோ கண்களில் நீர் அருவியாய் கொட்டுகிறதே.

வட்டமிடும் பட்டாம் பூச்சி மகிழ்ச்சியில் கிட்டவில்லையே எமக்கு.
 கூட்டுக்குள் நாம்

.

 உன்னை விட எம் இளைய நிலா மேல் அவர் போல் நீ கவிதை வடிக்க மாட்டாயே.