Friday, April 25, 2014

சாயி நாதா சாயி நாதா சர்வமும் நீயே

             


சாயி நாதா சாயி நாதா
சர்வமும் நீயே
ஷ்ரிடி சாயி ஸ்ரீ சாயி -எம்
சித்தம் எல்லாம் நீயே   ( சாயி )

சாயி நாமம் சொல்ல சொல்ல
சந்தன மணமே கமழும் எங்கும்
சீரும் சிறப்பும் விரும்பி சேரும்
சிந்தையில் தெளிவு காணும்   ( சாயி )

சாயி நாமம் செய்யும் மாயம்
சான்றோர் சகவாசம் கிட்டும் 
சீறும் சர்ப்பம் சாந்தம் கொள்ளும்
சீக்கிரம் சிரசில் ஞானம் சிந்தும்  ( சாயி )

பாழும் வாழ்வும் மீளும் வாழும்
வீழும் போதும்அவர் கரங்கள் நீளும்
சாயிபாதம் பற்றிட பாப நாசம்
பேசும் பேச்சில் வாசம் வீசும்     ( சாயி )

அவர்கருணை முழுதும் நம்வசம்
நம் மனது கொள்ளும் பரவசம்
நம் விதியும் செல்லும் அவர்வசம் -அஞ்சி
எமனும் கொள்ளான் தன்வசம்    ( சாயி )


 


நோய் பிணிகள் நலிந்து போகும்
சேதம் யாவும் சிதைந்து போகும்
இன்னல் யாவும் இடிந்து போகும்
இயற்கையும் இசைந்து வாழும்  ( சாயி )

ஜென்மம் முழுதும் இன்பம் தங்கும்
வன்மம் முழுதும் வடிந்து போகும்
வெந்த புண்ணை வருடிப்போகும்
சொந்த மண்ணும் சிந்து பாடும்   ( சாயி )
       


வேழமுகத்தான் வளைய வருவான்
இளையமுகத்தானும் இணைந்து கொள்வான்
ஆதி சக்தி அன்பை பொழிவாள் -பிறைசூடிய
பெருமான் வேதநாயகனும் வாழ்த்திச் செல்வான்  ( சாயி ) 

திருமாலும் நீரே திருப்பார்வை பாரும்
விருப்போடு ஏழைஎம்மை காரும் 
அடைக்கலம் புகுந்தோம் ரட்சிப்பீரே -இத்
திருக்கதை கேட்டபவர் திளைப்பார் பாரே      (சாயி)  


Wednesday, April 16, 2014

தோகை மயிலுமே கோடை மழை கண்டு



SHIVA PEACE by VISHNU108


நெற்றிக் கண்ணனே வெற்றித் திருநாளை
காண வழியின்றி தட்டுத் தடுமாறுதே


PRANAM by VISHNU108
வெற்றிக் களிப்போடு வீதி
வலம்வர வேளை வரவில்லையோ

சுற்றிப் படர்கின்ற கோடி மக்களின்
கேடு காணவில்லையோ

பற்றி கொண்டு உன்பாதம்
பணிகின்றோம் காதில் விழவில்லையோ

பற்றி எரியுதே பாழும் மனசுகள்  
வித்தை காட்டவிலையோ

ஆனைபலம் கொண்டு சேனை பல
கண்டு வெற்றி கொள்ளுவதோ 

இரத்தம் சிந்தாது கத்தி ஒங்காது
காண வழி இல்லையோ

பள்ளி சென்ற பிள்ளை வீடு திரும்பவில்லை
பள்ளி கொண்டு அங்கு பாலியல் வதை பாரும் கேட்கவில்லையே

அன்னை தந்தையும் அற்ற பாலகர் 
அலையும் உலகிலே அன்பைத் தேடியே  

ஆலமரம் சுற்றி அரச மரம் பற்றி
பெற்ற பிள்ளையை காண வழியில்லையே

ஊரில் பலபேசி தேடி பொருத்திய துணை
தெரு முனையிலும் இல்லையே

கட்டிய தாலி கண்ணில்
ஒற்றிக் கொண்டு காத்திருக்கிறாரே

தீர்க்கமான ஒரு முடிவு வேண்டுமே
திரும்பிப் பார் சங்கரா

ஆவி அழியாது கூடும் அழியாது
கோபம் கொண்டு நின்றால்

கண்கள் மூடாது கனவு பலியாமல்
காண வா சங்கரா

பாதகங்களும் பழிகளும் நீங்க
சாபம் இடு சங்கரா

வீடுமனை இன்றி வாழ வழியின்றி
காலம் கழிகின்றதே

மதியும் சரியில்லை விதியும் சரியில்லை
மனித மனம் கெடுகுதே

விடையும் தெரியாது
படையும் கிடையாது வா சங்கரா

சங்கடம் தீர்த்து சதிகளை நீக்கி
கார் சங்கரா அருள் தா சங்கரா

மோதல்கள் இன்றி சாதல்கள்  இன்றி
வாழவே வா சங்கரா

வறுமையில் வாடி வதனமும் மாறி
வருத்தமும் கொள்ளுதே

கொடியவர் ஆட்சி கண்டு கண்டு
தினம் உள்ளம் குமுறுதே

கடல் அலையில் ஆடுகின்ற கொடிகள்
போலவேஅல் லாடுகின்றோமே

நீதியில்லை அங்கு நியாயம் இல்லை
அந்த நீதி தேவதை எங்கே

கொடுமைகள் காண துணியாமல் அவள்
தன்னை கொன்று போட் டாளோ

பகைவர் என்ற ஒரு பகுதி இல்லை
என்ற நிலை வேண்டுமே

காகம் குருவிகளும் கரைகின்றதே
கவலை கொண்டு தானே
  
தோகை மயிலுமே கோடை மழை கண்டு
கொண்டாட வில்லையே

காதல் புரியாமல் கவலை கொள்ளாமல்
காவல் காத்தவர் எங்கே
காடு மலையுமே கதறுகின்றதே
காண சகியாமலே

ஆடு புலியாட்டம் ஆடுகின்றாரே
நாடு நலம் இல்லையே

கூடி மகிழாது கோடி துன்பங்கள்
நாடி வருகின்றதே

வீறு கொண்டு நீ வேதனைகளை
வேரறுக்க வா சங்கரா வா சங்கரா

அருளவா சங்கரா மகிழவா சங்கரா- நலம்
முகிழவா சங்கரா நீ முழுமுதல் அல்லவா






Saturday, April 12, 2014

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


வரும் நாளெல்லாம் வளமாக
வலையுல நண்பர்கள் வெகுவாக
வல்லுனர்களாய் உருவாக
வருவாய் புத்தாண்டே நிறைவாக!

வல்லபுகழும் வாய்த்திடவே
வித்தகராய் சிறந்திடவே
வெற்றிகள் வந்து குவிந்திடவே
வருவாய் புத்தாண்டே மகிழ்வோடு!

அன்பும் அறமும் தளைத்திடவே
ஆண்டவன் அருளும் ஒங்கிடவே
அற்புதங்கள் பல நிகழ்ந்திடவே
வருவாய் புத்தாண்டே மலர்ந்திடவே!

மஞ்சள் குங்குமம் நிலைத்திடவே
மங்கல மங்கையர் மகிழ்ந்திடவே
மண்ணின் பெருமைகள் பாடிடவே
வருவாய் புத்தாண்டே வாழ்த்தோடு!

ஈன்ற நாட்டை ஏந்திடவேண்டும்
இன்பம் எங்கும் சூழ்ந்திட வேண்டும்
ஈனப்பிறவிகள் ஒதுங்கிடவேண்டும்
இல்லை ஒருதுயர்இனி என்றநிலை வேண்டும்

விட்டுப் போன உறவுகளும்
தட்டு கெட்டு போகாது தடுத்திடவும்
திக்கெட்டும் நம் மக்கள் சிறந்திடவும்
வருவாய் புத்தாண்டேஇனிமை தர

தேன் தமிழும் திகட்டாது
தெள்ளு தமிழ் பேசிடவும்
வள்ளுவனார் விதைத்தபடி
வழி நடந்து தேறிடவும்

பாலும் பொங்கிட பழமும் மிஞ்சிட
பஞ்சம் அஞ்சி அரண்டே ஓடிட
கெஞ்சும் பகைவர்கள் மிரண்டேஓடிட
வஞ்சம் அனைத்தும் வரண்டே போய்விட

எங்கும் கலைகள் எழுந்து ஆடிட
ஏற்ற கல்வி எவரும் கற்றிட
ஏழை வாழ்வும் நனிசிறந்திட
வருவாய் புத்தாண்டே கனிவோடு!

காற்றும் மழையும் கனக்காமல்
காரிருளில் நாம் மிதக்காமல்
கண்ணீர் தினமும் வடிக்காமல்
காத்திடவே  நீ வருவாயே!

கற்றவரை என்றும் கனிவோடு
காட்டிட வேண்டும் காய்க்காமல்
கொடுங்கோல் ஆட்சி செய்யாத
கொற்றவன் வேண்டும் வரமாக

கோட்டையை பிடிக்கும் எண்ணங்கள்
கொள்ளாதிருக்கவும் வருவாயே!-அவர்
கடமை உணர்வு கைபிடியேனும்
கொண்டிடவேண்டும் வருவாயே!

நிம்மதியான  வாழ்வு வேண்டும்
நித்திரை தினமும் பற்றிட வேண்டும்
உற்றவர் உறுதுணை பெற்றிடவேண்டும்
நற்றவம் எங்கும் நல்கிடவேண்டும் வருவாயே!

வாழ்த்திட வாழ்த்திட வருவாயே 
வள்ளல் ஆக வருவாயே
பொன்னும் மணியும் தருவாயே
மின்னும் புன்னகை அருள்வாயே!






Friday, April 11, 2014

தொண்டுகள் செய்யாது தொலையாது பாவம்







தொண்டுகள் செய்யாது
தொலையாது பாவம்

 எம் பாவங்களின் விளைவுகள் தான் இப்பிறப்பு பாவத்தை தொலை க்கவே பிறப் பெடுத்து இருக்கிறோம் என்று அறியாமல் மேலும் பாவங்களை சேர்த்துக் கொண்டல்லவா இருக்கிறோம் நல்ல கருமங்களை செய்து பாவத்தை தொலைக்க முயல்வோமாக.

பெண்ணும் புளுங்கல்கூடாது
ஆணும் அடங்கல்ஆகாது

பெண்ணுக்கு உரிய சிறப்பையும் மதிப்பையும் வழங்காது அடிமைபடுத்தி சுதந்திரத்தை பறித்து கொடுமை படுத்தி வருத்துதல் கூடாது. அதே போன்று ஆணும் அந்  நிலைக்கு  பணிந்து நடத்தல் கூடாது.

உண்டபின் உறங்கல் ஆகாது 
உலகை வெறுத்லும் கூடாது

உணவை உண்ட உடனே உறங்கக் கூடாது அது போன்று வேதனை வெறுப்பு என்றும் நிரந்தரமாக உறங்க தோன்றும் போதும் உறங்கல் வேண்டாம்.(இறக்க நினைத்தல்)

திண்டாடும் போதே 
தேடும் ஆண்டவனை

துன்பங்கள் வந்துற்ற போது மட்டும்  இறைவனைவணங்குவது


வேண்டிடுவர் வரம்
மீண்டும்  வாழ்வுற

குற்றம் பொறுத்து வேண்டிய   வரம் அருளும்படி உருகி வேண்டுவது.

 

கண்கள் கரையாமல்
கவலைகள் தீராது

அழும் போது கவலைகள்  குறைந்து இலேசாகிவிடும்

கண்டாலும் துன்பம்
களைந்தாலே இன்பம்

பிறர் துன்பப் படும் போது உதவி செய்தால் மிகவும் சந்தோஷமும் திருப்தியும் ஏற்படும் சாதனை செய்தது போல மகிழ்வடையும் 
நம்உள்ளம்.

விண்டு இறைக்காது
விரைந்து நீர்ஊறாது

கிணற்றை இறைத்தால் உடனேயே நீர் ஊறி பழைய நிலைக்கு வந்துவிடும் .



தண்டனை வழங்காது
திருந்தார் வஞ்சகர்

கடுமையான தண்டனை குட்பட்டால் ஒழிய வஞ்சகர்கள் திருந்தமாட்டார்கள். கொடுக்கப் படும் தண்டனை கடுமையானதாக இருந்தால் ஏனையோரும் செய்யத் துணியார்.

தாண்டிடும் தவளைதான்
சேர்ந்திடும் இருப்பிடம்

முயற்சி இல்லாவிடில் நினைத்ததை சாதிக்க முடியாது.


 


கூண்டினில் கிடக்கின்ற
கிளியும் பேசிடும்

அடக்கி ஒடுக்கி வைத்திருந்தாலும் கிளி பேசுவதை தடுக்க முடியாது. கிளி சுதந்திரமாகவே பேசும்.



வண்ணத்து பூச்சியின்
வாழ்வும் வலியது 

மானிடவர் மட்டும் அல்ல அணைத்து உயிர்களும் கருணையோடு காக்கப் பாட வேண்டியவையே

ஆண்டவரும் புவியில்
மாண்டனரே முடிவில்

அரசர்களும் முடிவில் இறக்க வேண்டியவர்களே.

தாண்டவம் ஆடியே
தணிவார் மாண்டபின்

இறக்கு மட்டும் எந்த ஒரு காரணத்தாலும் மாறவே மாட்டார்கள்.
     
மூண்டிடும் நெருப்பினை 
மூடிஅணைத்திடு தூண்டாது

நெருப்போ அல்லது இருவருக்கிடையில் ஏற்படும் பகையினையோ பார்த்தால் அதிகப்படுத்தாது அணைப்பதற்கு முயற்சி செய்தல் வேண்டும்