Saturday, March 28, 2015

காற்றினில் கலந்தென் மூச்சினில் வரணும்



சாயி நாதா சரணம் சரணம்
சாயி நாதா சரணம் சரணம்
நின்சக்தி தனையே உணர்ந்திடும் நேரம்
நின்னருளினை எமக்கு அளித்திடு போதும் 

கண்களில் உள்ள கருணை தன்னை
காட்டிட வேண்டும் காலம் முழுதும்
எண்ணத்தில் மிதந்து எளிதினில் கடந்து
இறையன்பினை அடைந்திட அருளிடு சாயி

சங்கடம் தீர்த்திட சடுதியில் வரணும்
சர்வமும் நீயென சங்கே முழங்க
பொங்கிடும் மங்கலம் புரிதலும் தரணும்
பூவினில் அமைதி காத்திட வரணும்

வெற்றிப் பாதை காட்டி எம்மை 
வீழ்ந்தி டாமல்  அரவணை ப்பாயே 
பற்றிப் படர கொழு கொம்பாக 
பக்கம் நின்றே பணிசெய் வாயே

ஆற்றினைப்போல் நல்லெழி லினைத் தரணும் 
அற்றுப் போகா நிலைதனை விடணும்
தோற்றுப் போகத் தோன்றும்  நிலைமை
தொடர்ந்தி டாமல் தடைசெய் திடணும்   

காற்றினில் கலந்தென் மூச்சினில் வரணும்
கவலைகள் யாவும் கரைந்திட விடணும்
ஆற்றலை  வளர்த்து ஆறுதல் தரணும்
அல்லல்கள் அலறி ஓடிட வேண்டும்

உற்று நோக்கி உன்னத நிலையை 
உருவாக்கிடு போதும் உலகினில் நிலையாய்
பெற்றவர் களிப்புற அருளிடுவாயே நித்தியமாய்  
புறம்பேசி புண்ணாக்கும் நிலைஅருகிடவேண்டும் சத்தியமாய் 

குற்றங் குறைகள் குறுகிட அருள்வாய் 
குலவிளக்குகள் எங்கும் ஒளிர்ந்திட வருவாய்
ஊற்றெ டுக்குமன் புள்ளங்கள் 
உறையா  வண்ணம் காப்பாய்

சீற்றங்க ளின்றி சிரித்திட வேண்டும்
சிந்தனை  யாவும் சிறந்திட வேண்டும்
போற்றியே  உம்மை புகழ்ந்திட வேண்டும்
புண்ணியம் யாவும் சேர்ந்திட வேண்டும்

பற்றுப் பாசம் அகன்றிட வேண்டும்  நின்
பதமே துணை யென்றாகிட  வேண்டும்
சுற்றம் யாவும்  சூழ்ந்திட வேண்டும்
சுகங்கள் யாவும் சேர்ந்திட வேண்டும்

சிற்றறிவுகள் யாவும் சிதைந்திட வேண்டும்
சுதந்திர உணர்வுகள் பெருகிட வேண்டும்
கற்றவர் நிழலினில் ஒதுங்கிட வேண்டும்
காலங்கள் கைவசம் கனிந்திட வேண்டும் 

பெற்றாலிவை  பெரும் பேறே சாயி  
கொற்ற வனேஎமை காத்திடும் சாயி
சாயி சரணம்  சாயியே சரணம்
சாயி சரணம் சாயியே சரணம்