Saturday, February 15, 2014

ஈயார் தேட்டை


 

சினிமாவில் பஞ் டயலாக் மக்கள் மத்தியில் இலகுவில் பிரபல்யமாகிவிடும் அது போல் நல்ல விடயங்களையும், குறள்களையும், பழமொழிகள், ஆத்திசூடி இப்படி பலவற்றையும் எடுத்துச் சென்றால் கல்லாதவர்களும் குழந்தைகளும் கற்றுக் கொள்வார்கள் அல்லவா.

 சும்மா சொல்லிவிட்டு போவது சுலபம் என்று சொல்லக் கூடாது அல்லவா, அதனால் நான் ஒரு குறளையோ பழ மொழியையோ கவுண்டமணி செந்திலிடம் கொடுத்து நடிக்க சொன்னால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணினேன். இதோ அவை :-

கவுண்டமணி தெருவில் வந்து கொண்டிருக்கிறார்.அவருக்கு ரொம்ப பசி பணம் எதுவும்  கை வசம் இல்லை. அப்பொழுது இன்னொரு பக்கத்தில் இருந்து செந்தில் வந்து கொண்டிருக்கிறார் அவசரமாக  தன்னுடைய காதலிக்கு இனிப்பு பண்டங்கள் வாங்குவதற்காக. அப்பொழுது........



கவுண்டமணி:-  (ம் ..ம் மாட்டினாண்டா அமுக்கிட வேண்டியது தான்)                                                அடே  டே  டேய்   எங்கேடா  கிளம்பிட்டே?
 

                


             செந்தில்  :-    சும்மா தான் அண்ணே ஏன் கேக்கிறீங்க?        

கவுண்டமணி  :-      இல்ல தனியா போறியே சும்மா துணையா  வந்தா உதவியா இருக்குமேனு தான் கேட்டேன் .

 செந்தில்:-    அப்பிடியா அண்ணே.

கவுண்டமணி:-   ஆமா அப்படித் தாண்டா.

 -                    
செந்தில்:-  இல்:ல நான் அம்மாக்கு மருந்து வாங்கப் போறன் .




கவுண்டமணி:-   அட நம்ப அம்மாவுக்காடா சரி நானும் வாறன் வாடா

 (செந்தில் செய்வதறியாது திரு திரு வென முழிக்கிறான்)வேறு வழியில்லாமல் இருவரும் போகிறார்கள். ஒரு சிறிய சாப்பாட்டு கடைக்கு கிட்ட வந்து விட்டார்கள். அப்பொழுது கவுண்டமணி வாடா இரண்டு வடை சாப்பிட்டு விட்டு போகலாம் என்கிறார். செந்திலும் சரி என்று விட்டு செல்கிறார் ஏனெனில் இதில் வைத்து அவரை கழட்டி விட்டு போகலாம் என்று நினைத்தார் செந்தில். ஆனால் கவுண்டமணியோ இரண்டு வடைக்கு பதிலாக நாலு வடையை எடுத்து வரும்படி சொல்லி விட்டு உட்காருகிறார்.  அவரையும் இரு ராஜா நீயும் சாப்பிடு ரொம்ப களைப்பாக இருக்கிறாய் என்று வற்புறுத்தினார். . செந்தில் நமக்கென்ன அவர் தான் காசு கொடுக்கப் போகிறார் என்று நினைத்துக் கொண்டு சாப்பிடுகிறார். இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள். காசு கொடுக்கும் போது கவுண்டமணி தான் காசு கொடுப்பது போல் போகிறார். அப்புறம் வழமை போல் தான், காசை மணிப் பையை காணவில்லை என்கிறார். செந்திலை காசை கொடுக்கும் படி கேட்கிறார் பின்னர் தருவதாக, செந்தில் ஒரே அடியாக மறுக்கிறார்.
                         

கவுண்டமணி:-   அடே ஈயார் தேட்டை தீயார் கொள்வாரடா. குடுடா அப்புறம்  தருகிறேன் என்கிறார்.

     

செந்தில் :- யார்  யாரைக் கொண்டா எனக்கென்ன அதெல்லாம் தர முடியாது என்கிறார்.


கவுண்டமணி:- டேய் உனக்கு அதுக்கு கருத்து தெரியுமாடா (என்கிறார்). டேய் நீ பள்ளிக்கூடம் போய் இருக்கியாடா.

செந்தில்:-   ஆமா

கவுண்டமணி:-  அப்ப அதுக்கு கருத்து சொல்லடா பாப்பம் என்கிறார்
செந்தில்:-  அதுவா ஈ -யார் என்டா இலையான் தீ -யார் எண்டா நெருப்பு அது சாப்பிட ஏதாவது தேடிக்கொண்டு போகும் போது தீயில விழுந்திடும் அப்ப  தீ கொண்டிடும் இது எனக்கு தெரியாதா அண்ணே என்று சிரிப்பார்.

கவுண்டமணி செந்திலை அடிக்க துரத்துவார் அப்பொழுது ஒரு பெரியவர் வெள்ளை வேஷ்டியோடு வருவார். பொறுடா இவர் கிட்ட கேட்போம் படித்தவர் போல் தெரிகிறது என்று கேட்கிறார்கள். அவர் தெரியாது என்கிறார். வந்திட்டார் பெரிய வெள்ளை வேட்டியும் கட்டிக் கொண்டு ஓடுய்யா என்பார். அந்த வழியே பாடசாலை சிறுவன் வருகிறான் அவனிடம் கேட்போம் என்று கேட்கிறார்கள்.
அவன் விபரமாக எடுத்து சொல்கிறான் தனக்கும் பிறருக்கும் ஆபத்துக்கு உதவாத பணம் பிறரால் கொள்ளை அடிக்கப்பட்டு விடும் அதாவது கூடாத வழிகளில் பணம் விரயமாகி விடும் என்று, அருகில் இருந்த அனைவரும் அதை ரசித்து கை தட்டுகிறார்கள்.

(அந்த சிறுவன் சொல்லும் போது அதை அனைவரும் ரசிப்பதோடு மட்டுமல்லாமல் நினைவு வைத்துக் கொள்வார்கள் இல்லையா?)

பின்னர் இருவரும் தெருவோரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாக ஒரு பருமனான பெண் வருகிறார். அப்போது

கவுண்டமணி:-   அடே உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு என்கிறார்களே. அப்படி என்றால் என்னடா?

செந்தில் :-  அதுவா வயிறு சுருங்கினால் தானே அண்ணே இடுப்பு ஒல்லியாக அழகா இருக்கும் அதற்காக சொல்லியிருப்பார்கள்.
கவுண்டமணி :-   அடே நீ மாகா புத்திசாலிடா நான் ஒத்துக்கொள்கிறேன். அப்போ சிற்றுண்டி என்றால் என்னடா?

செந்தில்:-  நொறுக்கு தீனீ தான் அப்போ 

கவுண்டமணி :-  உண்டி என்றால் என்னடா 

செந்தில் :-  ஓ கோ  அப்போ உணவு அப்படித் தானே 

கவுண்டமணி:-    ஆமான்டா அப்பிடித் தான் சாப்பிடுகிற சாப்பாட்டை      குறைக்கனுண்டா.
                                  
(அந்த வழியில் இன்னொரு இளம் பெண் வருகிறார் அழகாக    ஆனால் குள்ளமான உடை அணிந்திருக்கிறார்).

செந்தில் :-   உண்டியை குறைக்க சொன்னா அவங்க உடையை இல்ல குறைக்கிறாங்க அண்ண இதென்ன கொடுமை அப்படீங்கிறார்.


இதை எல்லாம்  கொஞ்ச தூரம் தள்ளி கேட்டுக் கொண்டிருந்த பாட்டி அது அப்படி இல்லடா என்று சொல்லிவிட்டு  அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறார்.

அது பெண்கள் அதிக நேரம் சமயலறையில் இருக்காமல் சொற்ப நேரத்தில் சமையலை முடித்து விட்டு வரவேண்டும். அது தான் பெண்ணுக்கு அழகு, இல்லாவிடில் அவர்களால் ஏனைய வேலைகளையோ குழந்தைகளையோ பார்க்க முடியாதல்லவா? அதனால் உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு என்று சொல்லப் பட்டது என்கிறார்.  அப்படியா அவர்கள் வாயை பிளந்து கொண்டு நிற்கிறார்கள். இப்படியாக சரியான கருத்துகளையும் மக்களுக்கு தெரிவிக்க லாம் அல்லவா?
இந்த வகையில் பழமொழிகள் முதுமொழிகள் குறள்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றால் சிறியவரையும் தெரியாதவர்களையும் சென்றடையும் அல்லவா?

.சும்மா தோணிச்சு சொல்லிட்டேன் ஏற்றுகொள்கிறதும் கொள்ளாததும் உங்களைப் பொறுத்ததுங்க. பொறுமையாக வாசித்த உங்களுக்கு ரொம்ப நன்றிங்க.!

31 comments:

  1. வணக்கம்
    அம்மா.

    காலைப்பொழுதில் தங்களின் நகைச்சுவை கருத்தாடல் என்னை ஒரு கலக்கம் கலக்கி விட்டது நகைச்சுவை வழியே நல்ல கருத்தையும் சொல்லியுள்ளிர்கள்.... வித்தியாசமான கலர் எழுத்தில் கொடுத்தது.... நன்றாக உள்ளது... மேலும் பலநகைச்சுவைகள் வழி நல்ல கருத்துக்கள் மலர எனது வாழ்த்துக்கள் அம்மா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் ரூபன்!
      கலக்கமா தங்களுக்கா பயந்து விட்டீர்களா என்ன? அப்படி என்றால் சொல்லுங்கள் எடுத்துவிடுகிறேன். தைரியமான ஆள் என்றல்லவா நினைத்தேன்.ம்..ம்..ம். சரி....
      மிக்க நன்றி ! ஓடி வந்து இட்ட கருத்து நிம்மதி அளிக்கிறது. மிக்க மகிழ்ச்சி..! தங்கள் எண்ணமெல்லாம் ஈடேற வாழ்த்துகிறேன்...!

      Delete
    2. வணக்கம்

      எடுத்து விட வேண்டாம்... ( கலக்கம் கலக்கி விட்டது=ஒரு மகிழ்ச்சிப்புன்னகை) என்றுதான் சொல்ல வந்தேன்..... சூப்பர்.....

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      Delete
  2. இனிய வணக்கம் சகோதரி...
    தமிழ் வெள்ளித்திரையில் நகைச்சுவையில் நட்சத்திரமென
    மின்னிய இணைகோடுகள் இவர்கள்...
    நக்கலோடும் நைய்யாண்டியோடும் அவர்கள் பகிர்ந்துகொள்ளும்
    நற்கருத்துகளுக்கு அளவே கிடையாது..
    நன்றாய் இனிய பழமொழிகள் எடுத்து அதனை
    நகைச்சுவையோடு கலந்து எமக்கு தேன்சுவை வார்த்தீர்கள்..
    அருமை அருமை...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா ! மிக்க மகிழ்ச்சி!
      என்ன சொல்லப் போகிறீர்களோ என்று பயந்து கொண்டிருந்தேன். தங்கள் கருத்து உண்மையில் பாலை வார்த்தது.
      மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  3. எதையும் நகைச்சுவையோடு சொன்னால் மனதில் பதிவது உண்மை... அதை இரு நகைச்சுவை நடிகர்களோடு சொன்ன விதம் அருமை... பாராட்டுக்கள்... இது போல் மேலும் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா !
      கவிதையை விட்டு விட்டு இது என்ன வேலை என்று பேசப் போகிறீர்களோ என்று எண்ணி பயந்தேன். மிக்க மகிழ்ச்சி..!
      ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்...!

      Delete
  4. முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகிறேன் ,
    இனி தொடர்வேன்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா!
      தங்கள் வருகையில் ஆனந்தம் கொண்டேன்.ஆனால் இது முதல் முறையல்ல சகோதரா. வருகைக்கு நன்றி ! தொடருங்கள் தொடர்கிறேன் நானும்..
      வாழ்க வளமுடன்...!

      Delete
  5. நல்ல இயல்பான நகைச்சுவை. அருமை...
    மேலும் இது போல் தொடர நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ !
      வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி ...!
      நன்றியும் வாழ்த்துக்களும்...!

      Delete
  6. அட இது நல்லா இருக்கே நம்ம திரைத்துறை மக்கள் இதை யோசிக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி !
      மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகையில். நன்றி தொடர வேண்டுகிறேன்....
      வாழ்க வளமுடன்....! நானும் தொடர்கிறேன்...!

      Delete
  7. நல்லதொரு பகிர்வு! நகைச்சுவையோடு பழமொழிகளின் விளக்கத்தை சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்! ஒரு வேண்டுகோள் செந்தில் பேசும் டயலாக் பாண்ட் (எழுத்துரு) கலர் தெரியவில்லை! வேறு கலரில் மாற்றவும். படிக்க வசதியாக இருக்கும். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா !
      உண்மையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் உள்ளது. ஏனெனில் இவை கட்டுரை போட்டிக்காக எழுதியவை. உரையாடலை எப்படி அத்துடன் சேர்ப்பது என்பதால் விட்டுவிட்டேன். பின்னர் பல முறை
      யோசித்து பயந்து பயந்து தான் போட்டேன்.இவை பிடிக்கும் என்று தெரிந்திருந்தால் அப்பவே போட்டிருப்பேன்.
      மிக்க நன்றி சகோதரா....! வாழ்க வளமுடன்...!

      Delete
  8. வாழ்த்துக்கள் சகோதரி.
    இந்த அணுகு முறை ரொம்ப நல்லா இருக்கு.
    நான் இதை எங்கள் தமிழ் பள்ளிக்கு பயன்படுத்தலாமா சகோதரி?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக சகோதரா !
      அதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே. என் எண்ணமும் அது தானே. என் யோசனையை உடனேயே செயல்படுத்துவது என்பது எனக்கு தரும் ஆதரவு தானே, அதை ஏற்றுக் கொண்டதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.
      கரும்பு தின்னக் கூலியா. தாரளமாக செயல்படுத்துங்கள் சகோதரா நன்றி...!

      Delete
    2. வணக்கம் சகோதரி. சென்ற சனிக்கிழமை என் வகுப்பில் தங்களின் முதல் பழமொழியை மட்டும் எடுத்துக்கொண்டு இரண்டு பேரை (கவுண்டமணியாகவும் ,செந்திலாகவும்) தங்களின் வசனங்களை படிக்க சொன்னேன். வகுப்பில் இருந்த அனைவருக்கும் அப்படி ஒரு சிரிப்பு. 15 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை. அவர்களும் அந்த பழமொழியின் விளக்கத்தை எளிதாக புரிந்து கொண்டார்கள்.
      இந்த முறையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி.

      Delete
    3. வணக்கம் சகோதரா!
      கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னால் நம்பவே முடியவில்லை இதை வெளியிடலாமா என்று யோசித்து யோசித்து தான் வெளியிட்டேன். உடனடியாக செயல் படுத்தியதை இட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியே. பிள்ளைகள் மகிழ்வோடும் விருப்போடும் கற்க உதவ வேண்டும் அல்லவா. மிக்க நன்றி சகோதரா!
      பணி சிறக்க வாழ்த்துக்கள் .....!

      Delete
  9. அருமையான முயற்சி இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம் ..
    குறிப்பாக நீண்ட பாராக்களை உரையாடலாகவே தந்திருக்கலாம்...
    இருந்தாலும் நல்ல முயற்சிதான் நல்ல பதிவுதான்

    வண்ண தேர்வில் இன்னும் கவனம் எடுத்தால் நலம்...
    ஒரு குடும்ப வண்ணத்தை பயன்படுத்தவும் (family colours) நீலம், அடர் நீலம், மெல்லிய நீலம் என்று ...
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா! மிக்க மகிழ்ச்சி!
      தங்கள் கருத்து பெரும் மகிழ்வை தந்தது. நம்பிக்கையும் ஊக்கமும் அளித்தது எனவே இனி கவனம் எடுக்கிறேன். தங்கள் அறிவுரைகள் எப்போதும் எனக்கு தேவை. தங்கள் நட்பு என் பாக்கியம். மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன்....!
      நீலம் தெளிவாக தெரியவில்லையாம் வேறு நிறம் தீட்டிபார்க்கிறேன் தங்கள் கூற்றுப்படியே.

      Delete
  10. சூப்பர் தோழி! என் மாணவர்கள் கூட சந்தானம் சொல்லும் practice makes the man perfect என்பதை சரியாய் சொல்வார்கள். ஒரு மாணவனுக்கு குறிப்பேடு திருத்தும்போது அவன் guy என்பதை gay என்று எழுதி இருந்தான்,மற்றவன் அவன் நோட்டை பார்த்து சிரித்தான். உனக்கு எப்படி அந்த வார்த்தையின் பொருள் தெரியும் என்றேன். அவன் 'pray பண்ணுவேன் பாட்டில் சேது உன் boy friend எல்லாம் gay யா மாற pray பண்ணுவேன்னு படுவான்னு சொன்னான். சினிமா சில நேரம் பயனுள்ளதாவும் இருக்கிறது. அப்புறம் நட்பாய் ஒரு கருத்து சிவப்பு நிறம் கண்ணில் அடிக்கிறது. முடிந்தால் நிறம் மாற்றிவிட்டு அப்டேட் செய்யலாமே.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி!
      தங்கள் அறிவுரையும் கருத்தும் என்னை ரொம்பவே ஊக்கப்படுத்துகிறது. நீண்டநாள் பழகியது போலும் ஒரு உணர்வு. உரிமையாகவே நீங்கள் சொல்லாம் தயக்கமின்றி சரி தானே தோழி. அப்டேட் செய்துள்ளேன் அவசரமாக இன்னம் சரி செய்யலாமா பார்க்கிறேன்.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ! தொடர வேண்டுகிறேன் ...!
      வாழ்க வளமுடன்...!

      Delete
    2. இப்போ இன்னும் அருமையா இருக்கு இனியா !
      பேரை போல இனிய குணம் இனியாவிற்கு !

      Delete
    3. வணக்கம் தோழி!
      தங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்!
      போற்றும் குணம் கொண்ட தாங்கள் எவ்வளவு பெருங் குணம் கொண்டவர். தங்கள் நட்பு கிடைத்தது என் பாக்கியமே.
      மிக்க நன்றி ! வாழ்க வளமுடன்....!

      Delete
  11. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    திரைப்பட பாடல்கள் மற்றும் உரையாடல்களை நினைவு வைத்துக் கொள்ளும் மாணவர்கள் இது போன்ற பழமொழிகள். திருக்குறள், ஆத்திச்சூடியை நினைவில் வைக்க தடுமாறுவது கண்டு கற்பித்தல் முறையை மாற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பது மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அன்பு சகோதரி அருமையான வழியை காண்பித்துள்ளீர்கள். இதோ வகுப்பறை பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்கிறேன். அழகான கற்பனை சகோதரி தங்களுக்கே வாழ்த்துகளும் நன்றிகளும்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அன்புச் சகோதரரே !
      தங்கள் வருகை கண்டு உள்ளம் பூரித்து போனேன். கருத்தும் வழமை போல் மகிழ்வித்தது. நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமையும் கருத்து என்னை எப்போதும் ஊக்குவிக்கும். இந்த யோசனையை ஏற்றுக்கொண்டு கற்பிக்க எண்ணுவதையிட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.
      மிக்க நன்றி சகோதரா ...! வாழ்க வளமுடன்....!

      Delete
  12. வலைத்தளத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரியான புதுமைகளை நிகழ்த்திக்கொண்டு வருகிறார்கள். நீங்கள் இன்னொரு புதுமாதிரி. சுவையான பதிவு! கவுண்டமணி-செந்திலை புதிய படங்களில் காணமுடியாத குறையை உங்கள் எழுத்தும் படமும் தீர்த்துவிட்டன! (உம்ம்....என்ன செய்வது, நாங்களெல்லாம் இன்னொரு வலிமையான போட்டியாளரை இனி சந்த்தித்தாகவேண்டும்!)

    ReplyDelete
  13. வருக வருக தங்கள் வரவு நல்வரவாகுக !
    சகோதரரே என்ன இப்படி சொல்லி விட்டீர்கள் நம்பவே முடியவில்லை நானா?. உண்மையில் என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மிக்க நன்றி சகோதரா! ஊக்கம் தரும் தங்கள் கருத்தும் நெகிழவைத்தது. இதை எழுதிவிட்டு வெளியிட யோசித்துக் கொண்டிருந்தேன் ரொம்ப நாட்களாக இதை நான் எதிர்பார்க்கவே இல்லை சகோதரா. நன்றி! நன்றி ! தொடர வேண்டுகிறேன்! வாழ்க வளமுடன் ....!
    அறிமுகதிற்கும் நன்றி ! தொடருங்கள் தொடர்கிறேன் !

    ReplyDelete
  14. வணக்கம் சகோதரி. ஏற்கெனவே என் தங்கை மைதிலியின் வலை இணைப்பைப் பார்த்து உங்கள் தளத்திற்கு வந்தால்... அழகான கைவேலைஅழகு அத்தோடு கவிதை அழகு பார்த்து அசந்து போனேன். என் வலைப்பக்க இணைப்பிலும் தந்திருக்கிறேன். கற்பனை என்பது கவிதை, கதையில் மட்டுமென்று யார் சொன்னது? இதோ என் சகோதரி தந்திருக்கும் “ஈயார் தேட்டை“ போன்ற நல்ல விடயங்களைச் சொல்லும் முறையிலும் பார்க்கலாம் என்று காட்டிவிட்டீர்கள்! பாராட்டுகள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரா !
      தங்கள் வருகை கண்டு ஆனந்தம் அடைந்த நான் தங்கள் கருத்து கண்டு உண்மையில் அசந்து தான் விட்டேன். வார்த்தைகளே இல்லை என்ன சொல்ல.தங்களதும் வலை தள உறவுகளின் அன்பும் ஆதரவும் தான் காரணம். இதுவே என்னை மேலும் வளர்க்கும். அன்புச் சகோதரரின் அன்பும் பாராட்டும் என்னை இன்னும் மின்னச் செய்யும் என்பதில் ஐயமில்லை.அன்றும் நீங்கள் சுட்டிக் காட்டினீர்கள்.
      இன்றும் அப்படியே, இல்லையேல் எனக்கும் தெரியாது நம்பிக்கையும் வராது இல்லையா. மிகுந்த சந்தோஷம் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. ரொம்ப நன்றி சகோதரா.....!
      வாழ்க வளமுடன் ......! தொடர வேண்டுகிறேன்.

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.