Saturday, September 7, 2013

இரவினில் வரும் நிலவே




 
இரவினில் வரும் நிலவே 
நீ பகலினில் வருவாயா
பகலில் நடக்கும் நிகழ்வுகளை     
நீ பார்த்திட விளைவாயா

இயற்கையின் நியதியை 
 மீறிட நினைப்பாயா 
இன்பம் துன்பம் எது
வென்று அறிவாயா 

பௌர்ணமி நிலவில் 
தாய் மண்ணில் இருந்து
ஊர்க்கதை அளப்பதும்   
இனிமேல் நடக்காது  

இயந்திர உலகில் பயணிக்கும் 
எமக்கு நேரமும் கிடைக்காது 
 கவனம்  முழுவதும் கணனியிலே    
இயற்கையை  ரசிக்கவும் இயலாது  

சிறுவரின் ஆட்டமும் வீதியில் இல்லை
கணினியில் தானே நோட்டம்  
ஓடாமல் ஆடாமல் ஒய்ந்து கொண்டார் 
ஒரு இடத்தில் நோய்கள் கொண்டவர் 
பருத்து விட்டார் பல இடத்தில் 

இதை அறியாமல் நீ தூங்கும் போது 
வருகின்றாய் விழிக்கும் போது 
மறைகின்றாய் எமை வெறுப்பது 
போலேன்  நடக்கின்றாய்

என் கரங்களிலே உனை ஏந்திடவா 
என் மனசை திறந்து பேசிடவா 
பரிதியவன் ஒளியினையே இரவல்
 தந்தானா அதை  இரவினில் தந்தானா

பகலினில் வந்தால் தன் மவுசு 
குறைந்திடும் என்றே பயந்தானா இல்லை
 பகலை பார்த்தால் பயந்திடுவாய் 
என்று பதுங்கிட சொன்னானா 

 உன் இளகிய மனசு வெதும்பிடும்
என்று விலகிட சொன்னானா
 இனிமையானது இரவு தான்
என்றிரவை ஆண்டிட சொன்னானா 

காதலர் கண்கள் கலப்பதையும்
கனவினிலே மிதப்பதையும் 
கண்டிட சொன்னானா 

அமைதியாக உறங்கும்
 உலகை ரசித்திட சொன்னானா 
ஆர்பாட்டம் இல்லாத அலையினையே 
அணைத்திட சொன்னானா

பகலவனை நீ பார்த்ததுண்டா 
பரிசில்கள் ஏதும் பெற்றதுண்டா
தாமரை மலர்ந்தது கண்டாயா 
இளம் துளிர்கள் மிளிர்வதை அறிவாயா

வானத்திலே  வண்ணக் கோலம் போடும் 
பறவை  இனங்கள் கண்டாயா 
 பொங்கும் கடலில் துள்ளி குதிக்கும் 
மீன்வகைகள் நீ பார்த்ததுண்டா

துள்ளி ஓடும் புள்ளி மானின் 
மருண்ட கண்கள்  கண்டாயா
சூரிய ஒளியில் பட்டு தெறிக்கும் 
வானவில்லை நீ கண்டாயா

வறுமையில் சிக்கித் தவிக்கும் 
வாழ்க்கைகள் கண்டாயா
பிஞ்சுக் கரங்கள் உழைக்கும் 
காட்சி கண்டிட வேண்டாமா 

பொம்மைகளை அவர் கண்டதில்லை 
பல உண்மைகள் கண்டார்கள் 
 பந்தாடும் வயதினிலே தினம் 
திண்டாடும் கொடுமைகளை 
குறைத்திட வேண்டாமா

குற்றம் குறைகள் நலிந்திருக்கே 
அதை நிறுத்திட வேண்டாமா
அரசியலும் ஒரு சாக்கடை தான் 
அதை அலசிட வேண்டாமா

நீ ஒரு முறை பார்த்தால் 
ஒளிந்திடுவாய் மேகத்தின் 
மடியில் மறைந்திடுவாய்
வேண்டாம் எமக்கு ஏமாற்றம் நீ 
இருக்கும் இடத்தில் இருந்து விடு

9 comments:

  1. நிலவினை கேட்கும் கேள்விகளில்
    நிஜங்களின் வலிகள் தெறிக்கிறதே
    நிலையிலா வாழ்வின் கனவுகளை
    சிலைகளால் உணர்ந்திட முடியாதே...!

    அருமை அழகு வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  2. உண்மை தான் சிலைகளாலும் உணரமுடியாது, விலைக்கும் வாங்கமுடியாது. ஆனால் என்னால் ஓரளவு உணரமுடியுதே, மற்றவர்களுடைய வலியை உணர மனிதாபிமானம் போதுமே. என்ன எழுதி என்ன தலைஎழுத்தை மாற்ற முடியாதே. சீராளன் அவர்களே உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் ரொம்பரொம்ப நன்றி!

    ReplyDelete
  3. வித்தியாசமான ஆழமான அருமையான
    சிந்தனையுடன் கூடிய கவிதை மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. உண்மையாக ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. நன்றி ஐயா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அருமை சகோதரி..
    கற்பனையிலும் பல ஜாலங்கள்
    காட்டி காட்சியாய் கவியைத்
    தந்த எங்கள் கவியரசிக்கு
    வாழ்த்துக்களும் வணக்கங்களும்.. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. சகோதரா....!
      உங்கள் வருகை கண்டு இனித்தது உள்ளம்
      கருத்தும் கற்பனையை தட்டிவிட்டது
      உங்கள் வாழ்த்துக்கள் வானத்தில் மிதக்க விட்டது.மிக்க மகிழ்ச்சி....! என் இனிய சகோதரனுக்கு என் மனம் நிறைத்த வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு நோய் நொடிகளின்றி....!

      Delete
  7. ஆஹா ஆஹா,
    சோகமும் சுகமும் இதயமும் படைத்து நீங்கள் படைத்த நிலாவை இப்போது வீட்டுக்கு வெளியே போய் இன்னொரு முறை பார்த்துவிட்டு வந்துதான் பின்னூட்டமிடுகிறேன்.
    பரவாயில்லை
    அது இருக்கும் இடத்திலேயே விட்டுவிட்டதனால்தானே இன்னொரு முறையும் எங்களுக்கு ஒரு நிலாப்பாட்டுக் கிடைத்தது.
    நீங்கள் எல்லாம் மேகம் மறைத்த நிலவாய் இருக்கிறீர்கள்!
    எனக்கெல்லாம் இணையம் மூலம் பார்க்கும் வாய்ப்பாவது இருந்தது என்று சந்தோஷப் பட்டுக்கொள்கிறேன்.
    நல்ல கவிதை சகோதரி!
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ! என் வேண்டுகோளுக்கிணங்கி இக் கவிதையை
      பார்வையிட்டு இனிய கருத்தும் ஈந்தமைக்கு நன்றிகள் பல சகோ தங்கள் வருகையும் வழங்கிய கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியையும் தென்பையும் வழங்கின சகோ! வாழ்க நலமுடன் என்றும் ...!

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.